குரங்கின் கையில் பூமாலையும் ரணில் கையில் தேர்தலும்
குரங்கின் கையில் பூமாலையும் ரணில் கையில் தேர்தலும்

(ஆதவன்)

நாடாளுமன்றத்தில் அரதலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப்பிரகடனம் மீதான விவாதம் நேற்று முன்தினம் ஆரம்பமானது. இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கூறிய விடயம் தொடர்பில் கவனத்தில் கொள்ளவேண்டும்.

'இது தேர்தல் வருடம், எனினும், அரதலைவரின் கொள்கை விளக்க உரையில் தேர்தல் பற்றி எதுவும் குறிப் பிடப்படவில்லை. ஏனெனில் அரதலைவர் தேர்தலை ஒத்திவைப்பதற்கான முயற்சிகள் இடம் பெற்று வருகின்றன என்று அறிய முடிகின்றது. இதற்காக சில சிவில் அமைப்புகளையும் அரசு வளைத்துப்போட்டுள்ளது. அவ்வாறு வளைத்துப்போட்டு நிறைவேற்று அதிகார அரதலைவர் முறைமையை நீக்குவதற்கான யோசனை முன்வைக்கப்படவுள்ளது. இதனைச் செய்வதாக இருந்தால் புதிய அரசமைப்பு அவசியம். அது இயற்றப்படும் வரை தேர்தலை ஒத்தி வைக்கலாம் என கோறிக்கை முன்வைக்கப்பட்டு, தேர்தலைப் பிற்போடவே முற்படுகின்றனர் ஆட்சியாளர்கள்' என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

இதை வெறுமனே எதிர்க்கட்சிகள் கூறும் வழமையான மேம்போக்கான குற்றச்சாட்டாகக் கடந்து விட முடியாது. ரணில் விக்கிரமசிங்க என்ற நபருக்கும் தேர்தலுக்கும் எட்டாப் பொருத்தம். அவர் நல்லாட்சி காலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எவ்வளவு தூரம் இழுத்தடித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். பின்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் எழுந்த போது, மொட்டுக் கட்சி வசம் ஆட்சி செல்லும் என்ற அச்சத்தால் மாகாணசபைத் தேர்தல் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்து இன்று வரையில் மாகாணசபைத் தேர்தலே நடத்த முடியாத இக்கட்டுக்குள் கொண்டு வந்து தள்ளி விட்டவர் இந்த ரணில் விக்கிரமசிங்க, அத்தோடு அவரது தேர்தல் பயம் போகவில்லை. பின் கதவால் நிறைவேற்று அதிகார அரதலைவர் என்ற பதவியைப் பிடித்த பின்னர், உள்ளூராட்சி சபைத் தேர்தலை எப்படி நடக்க விடாமல் செய்தார் என்பதை கண் முன்னாலேயே எல்லோரும் பார்த்தார்கள் நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனைச் செயற்படுத்தாமல் சட்டத்தின் ஓட்டைக்குள்ளால் புகுந்து ஓடி, பாதுகாப்பான வலைக்குள் பதுங்கியிருக்கும் 'நரி' அவர். இப்போதும் உள்ளூராட்சித்தேர்தலை நடத்தவேண்டும் என்பதைப்பற்றிய எந்தவொரு சிந்தனையும் இல்லாதவர், நடந்தால் அரதலைவர் தேர்தல் தான் என்ற நினைப்பில் இருப்பவர். மக்கள் தன்னை மீண்டும் அரதலைவராகத் தெரிவு செய்வதை உறுதிப்படுத்திய பின்னரே அவர் தேர்தலை நடத்துவார். அதுவரையில் அரதலைவர் தேர்தலை இழுத்தடிப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்வதற்கு ரணில் தயங்கமாட்டார்.

லக்ஷ்மன் கிரியெல்ல சொல்வதைப்போன்று, நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தல் என்ற கோஷத்தை முன்னிறுத்தி அரசமைப்பு மாற்றத்தை ஆரம்பித்து காலத்தை இழுத்தடித்து அரதலைவர் தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் விடுவதற்கான எத்தனங்களில் ரணில் ஈடுபடுவதற்கான சாத்தியங்கள் அதிகமே. ஏனெனில் மாகாணசபைத்தேர்தல் விடயத்தில், காலவரையறையின்றி அதனை இன்னமும் நடத்தக்கூட முடியாத இக்கட்டுக்குள் சட்டத்திருத்தம் மூலம் கொண்டு சென்று விட்ட ரணிலுக்கு. அரதலைவர் தேர்தலையும் அவ்வாறான ஒரு சூழ்ச்சி மூலம் பின் தள்ளுவது கடினமானதொரு காரியமே அல்ல.

தனக்கான காலம் கனிந்து வரும் வரையில், எதிரணிகள் களைத்துப்போகும் வரையில் அவர் அரதலைவர் தேர்தலை இழுத்தடிக்கக்கூடும். ரணிலின் இந்தத் தந்திரங்களுக்கும்- சூழ்ச்சிகளுக்கும் எதிராக எவராலும் ஒன்றும் செய்ய முடியாது. குரங்கின் கைப் பூமாலை போல பொருத்த மில்லாத ஒருவரின் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு ரணில் மிகச்சிறந்த உதாரணம். (ஏ) 

(10.02.2024 உதயன் பத்திரிகை)

 

#uthayannews #newsupdate #todaybreaking #newsupdate #breaking

401 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.