ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை களமிறக்கும் விடயம் அடுத்தகட்டத்தை எட்டியிருக்கின்றது. சிவில் சமூகத்தினர் இது தொடர்பில் தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகளுடன் பேச்சுகளை நடத்தத் தொடங்கியிருக்கின்றனர். சிவில் சமூகத்தைப் பொறுத்தவரையில் என்ன நோக்கத்துக்காக தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படவேண்டும் என்பது தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கின்றனர். தமிழ்ப் பொதுவேட்பாளரை எதிர்ப்போர் அல்லது அதனால் கலக்கமடைந்திருப்போர் தமது நிலைப்பாட்டை என்னவென்று பகிரங்கப்படுத்தவில்லை. ஆனால் பொத்தம் பொதுவாக தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படுவதை எதிர்க்கின்றனர். அவர்களால் தமது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த முடியவில்லை. மாறாக தமிழ்ப் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். தமிழ்ப் பொது வேட்பாளரை நிராகரிப்பவர்களால் எந்தச் சிங்கள வேட்பாளருக்கு தமிழ் மக்கள் வாக்கிட வேண்டும் என்பதையும் சொல்லமுடியவில்லை. அவர்களால் சொல்லவும் முடியாது. ஏனெனில் எந்தவொரு சிங்கள வேட்பாளரும் தமிழ் மக்களின் ஆகக்குறைந்த கோரிக்கைகளைக் கூட ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இதனால்தான் எந்தவொரு சிங்கள வேட்பாளரையும் ஆதரிக்குமாறு. தமிழ்ப் பொதுவேட்பாளரை எதிர்ப்பவர்களால் சொல்ல முடியாமல் உள்ளது. ஆனால், தமிழ்ப்பொதுவேட்பாளரை எதிர்க்கவேண்டும் என்ற குருட்டுவாதத்தை மாத்திரம் அவர்கள் முன்வைக்கின்றனர்.
தலைமை என்பது மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். மக்கள் நினைப்பதை அல்லது விரும்புவதன் பின்னால் செல்வதல்ல, மக்களுக்கு எதுதேவை என்பதை அவர்களுக்கு அறிவூட்டுவதே தலைமைக்கு அழகு- தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரத்திலும் தமிழ் மக்களை அறிவூட்டவேண்டிய தேவை தமிழ் சிவில் சமூகத்துக்கும், தமிழ் அரசியல் தரப்புகளுக்கும் உண்டு. மக்கள் இதுவரை காலமும் ஜனாதிபதித் தேர்தல்களில் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்தே பழகியவர்கள். அவர்கள் தமிழ்ப் பொதுவேட்பாளரை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று கேட்பது இயல்பானது. இவ்வாறான சூழலில் தலைமைகள் என்று சொல்வோர் மக்களை தெளிவுபடுத்தவேண்டும். தமிழ்ப் பொதுவேட்பாளரை இம்முறை முன்னிறுத்துவதன் தேவை என்ன என்பதை உணரச்செய்யவேண்டும். தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம் தமிழ் மக்களுக்கு இம்முறை புதிது என்பதால், மக்கள் வாக்களிப்பார்களா? இல்லையா? என்ற குழப்பம் அரசியல் கட்சிகள் மத்தியில் உண்டு. ஏனைய தேர்தல்களில் இல்லாத ஒரு பதற்றம் இந்த விடயத்தில் அரசியல் கட்சிகளிடத்தில் காணப்படுகின்றது. இது தேவையற்ற பதற்றம். மக்கள் முன்பாக தமிழ்ப் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை கொண்டுசென்று சேர்க்க வேண்டியது தான் அரசியல் கட்சிகள் செய்யவேண்டியது. அதைச் செய்வதற்குப் பின்னடிக்கக்கூடாது.
தமிழ்ப் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டைக் குழப்புவதற்கு பல சக்திகளும் முயற்சிக்கும். தமிழ்ப் பொது வேட்பாளரால் எந்தத் தரப்புகளுக்குப் பாதிப்போ அந்தத் தரப்புகள் நிச்சயம் இதைக் குழப்பவே செய்யும். தமிழ் மக்கள் மத்தியில், தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பான நடைமுறைச்சாத்தியமற்ற பல கதைகள் உருவாக்கப்படவும்கூடும்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் பேச ஆரம்பிக்கப்பட்ட போது, ராஜபக்சக்களுக்கே அது வாய்ப்பு என்ற கருத்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்வைக்கப்பட்டது. ஆனால் அந்தக் கருத்துத் தவறானது என்பதையும், அது வெறும் பூச்சாண்டித்தனமானது என்பதையும் பலரும் ஆதாரங்களோடு முன்வைத்ததால், அந்தக்கருத்து காணாமற் போய்விட்டது. பொய்யான நிலைப்பாடுகளை முன்வைத்து தமிழ் மக்களைக் குழப்ப முயல்வோர் இனியாவது ஒதுங்கியிருப்பது நல்லது.
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.