(ஆதவன்)
குடிப்பது கூழ், கொப்பளிப்பது பன்னீர் என்றொரு முதுமொழி தமிழில் வழக்கில் உள்ளது. எந்த விடயத்துக்கு இது பொருந்துகின்றதோ இல்லையோ, இலங்கையின் அண்மைக்கால அரசியலுக்கும் அதன் நகர்வுக்கும் இந்த முதுமொழி கச்சிதப் பொருத்தம். விடயம் என்னவென்றால், எதிர்வரும் மே மாதத்தில் இடம்பெறவுள்ள வெசாக் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையிடம் நிதியுதவியைக் கோரியிருக்கின்றது இலங்கை. ஒரு பண்டிகையை யாசகமெடுத்தேனும் கொண்டாடி விடுவது என்ற நிலைப்பாட்டில் இருப்பதற்காக அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். அதேநேரம், வரவிருக்கும் வெசாக் கொண்டாட்டங்களின் பின்னால் உள்ள ஆபத்தான செய்திகளையும் இலங்கையர்கள் ஆழ்ந்து உணர்ந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமுமாகும். இந்த வருடம் தேர்தல் காலமாகையால், அரசாங்கம் வறிய நிலையில் இல்லை என்ற எண்ணப்பாட்டை மக்கள் மத்தியில் தோற்றுவிக்க வேண்டிய கட்டாயம் ஆளும் தரப்புக்கு இருக்கவே செய்கின்றது. ஆதலால், வரவிருக்கும் வெசாக் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடவே அரசாங்கம் முனையும். அதற்காக பல மில்லியன் ரூபாவை வாரியிறைக்க வேண்டி ஏற்படும். இவ்வாறானதொரு பின்னணியில் தான் இந்த நிதியுதவியை அரசாங்கம் கோரியிருக்கலாம்.
அதைவிட, மதம் சார்ந்த கொண்டாட்டங்கள் தற்போது இலகுவாக மக்களை ஒன்றிணைக்கும் விடயங்களாக மாறிவிட்டன. இந்தியாவில் அண்மையில் இடம்பெற்ற அயோத்தி ராமர் கோவில் திறப்புவிழாவின் பின்னர் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு அங்கு பல மடங்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. இந்தக் கொண்டாட்டங்கள் ஏற்படுத்தியுள்ள 'ராம தேசம்' என்ற மாயையை வைத்தே. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை பாரதிய ஜனதாக்கட்சி எதிர்கொள்ளவுள்ளது. இந்திய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று பாரதிய ஜனதாவை நோக்கி தற்போது முன்வைக்கும் மிகப்பெரும் குற்றச்சாட்டும் இதுதான். இவ்வாறானவொரு பார்வையில் தான் வரவிருக்கும் வெசாக் பண்டி பல கையை அரசாங்கம் எதிர்கொள்ளப் போகின்றதா? என்ற நியாயமான சந்தேகங்களும் எழவே செய்கின்றன.
வெசாக் பண்டிகையைப் பெருமெடுப்பில் முன்னெடுத்து, அதன் மூலம் 'இலங்கை ஒரு பௌத்த தேசம்' என்ற எண்ணப்பாட்டை வலிந்து உருவாக்கி அதை வாக்குகளாக மாற்ற ஆளும் பெரமுனவும், அதன் நிழலாக இருக்கும் அரச தலைவர் ரணிலும் முனையலாம். ஆதலால், வெசாக் பண்டிகை தொடர்பான தீர்க்கமான கருத்துகளை - நிலைப்பாட்டை - பின்னணியை எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று வெளிப்படையாக இயம்பவேண்டும். மாறாக, சிங்கள பௌத்த வாக்குகளைகருத்திற்கொண்டு வழக்கம்போன்று கள்ள மௌனம் காக்கப்படுமாயின், அது இந்தப் பித்தலாட்டத்துக்கு எதிர்க்கட்சிகளும் உடந்தை என்ற எண்ணப்பாட்டையே சர்வதேசத்தை நோக்கி வலிதாகத் தோற்றுவிக்கும். இது பல இடங்களில் இலங்கையை நின்று கொல்லும்.
பொருளாதாரப் பேரிடரிலிருந்து நாட்டை மீட்டுச் சீர்ப்படுத்தத் தேவையான உட்கட்டுமானங்கள் இன்னமும் அமைக்கப்படவில்லை, தன்னிறைவு காணக் கூடிய துறைகளில்கூட முதலிடுவதற்கு நிதிப் பற்றாக் குறையை அரசாங்கம் நீண்டகாலமாகவே எதிர் நோக்கியுள்ளது.கடன்கள் இல்லாத இலங்கை உருவாக்கப்பட வேண்டுமாயின் புதிய தொழில்துறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்படுகின்றது, வர்த்தகச் சுழற்சி இன்னமும் சீர்ப்படுத்தப் படவில்லை. இவ்வாறாக எதற்கெடுத்தாலும் 'இல்லை', 'பற்றாக்குறை' என்ற நிலையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் போது, வெசாக் கொண்டாட வேண்டும் அதற்கு நிதிதேவை என்று ஐ.நா.விடம் கேட்பதற்குக்கூட ஓர் அசாத்தியத் துணிவு வேண்டும். 'பிச்சை புகினும் வெசாக்கை விடேல்' என்ற நிலைப்பாடு இருக்கும் வரை இந்த நாடு உருப்படப் போவதில்லை.
30.01.2024 உதயன் பத்திரிகை
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.