பெரும்பாவம் பொல்லாதது.
பெரும்பாவம் பொல்லாதது.

எழிலன்

கடந்த மூன்று வருடங்களில் அண்ணளவாக 2 ஆயிரத்து 400 மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் சட்டத் துக்குப் புறம்பாகச் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வெளிப்படுத்தியிருக்கின்றார். 2020ஆம் ஆண்டு தொடக்கம் இடைப்பட்ட இரண்டரை வருடங்களில், மாணவர்களை ‘சட்டவிரோதமாக' இணைப்பது தொடர்பான சுமார் 3 ஆயிரத்து 300 கடிதங்கள் கல்வி அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்டுள்ளன என்றும் இந்தக் கடிதங்களில் 70 வீதமானவற்றுக்கும் மேற்பட்டவை ஜனாதிபதி செயலகம், பிரதமர்அலுவலகம், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமையவே வழங்கப்பட்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார். 

'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' என்பதான தொனிப்பொருளில் கிராமங்கள்தோறும் உள்ள பாடசாலைகளை வலுப்படுத்தும் திட்டமொன்று இலங்கை அரசால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்தத் திட்டம் இப்போதும் உயிர்ப்புடன் இருக்கவே செய்கின்றது. கிராமங்களில் உள்ள பாட சாலைகள், மாணவர்கள் வருகையின்மையால் மூடப் பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் கல்வித்துறையின் கிராமக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், மாணவர்களின் இடைவிலகலை இல்லாமலாக்கி அவர்களை பாடசாலைகளை நோக்கி அழைத்துச் செல்லவும் இந்த அயற் பாடசாலை சிறந்த பாடசாலை' என்ற திட்டம் காலத்தேவையானதாகவே இருந்தது. இன்னும் சொல்லப்போனால், இலங்கை அரசாங்கத்தால் அண்மைக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருசில சிறந்த திட்டங்களில் இதுவும் ஒன்றே. ஆனால், எந்தத் திட்டமும் இதயசுத்தியுடனான செயற்பாடுகள் இல்லாவிட்டால் வெற்றிபெறாது.


வேலியே பயிரை மேய்வது இலங்கைக்குப் புதிதல்ல. இதுவே இப்போது கல்விக் கட்டமைப்பிலும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. கிராமங்கள் தோறும் உள்ள பாடசாலைகளைப் பலப்படுத்த வேண்டும். இலங்கையில் இலவசக் கல்வி அனைவரையும் 'சீரான' முறையில் சென்றடையவேண்டும் என வாய்ச்சவடால் விட்டுக் கொண்டு, பிரபல பாடசாலைகளில் 'சட்டவிரோத இணைப்புகளுக்காக' கடிதங்களை வழங்குவதென்பது, 'படிப்பது தேவாரம், இடிப்பது சிவன்கோவில்' என்பதான செயலன்றி வேறென்ன?
அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள், பணம் படைத்தவர்கள் மட்டும் இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. யாழ்ப்பாணக் குடா நாட்டில் இன்று பல பாடசாலைகளில் சட்டவிரோதமான மாணவ இணைப்புகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது கசப்பான உண்மையே. அதிலும் மருத்துவர்கள், பொறியியலாளர்கள் என கற்றறிந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே இந்தப் பிறழ்வான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலைகளில் ஒரு மாணவனை அல்லது மாணவியைச் சேர்க்கவேண்டுமாயின், அந்தப் பாடசாலைகளுக்கு அருகில் குறைந்தது ஐந்து வருடமேனும் வசித்திருக்கவேண்டும் என்ற நிபந்தனை பின்பற்றப்படுகின்றது. இந்த நிபந்தனை கற்றறிந்த சமூகத்தவர்களால் மிகச் சாதாரணமாக மீறப்படுகின்றது. சட்டத்தரணிகள் மூலம், அல்லது கிராம அலுவலர் மூலம் 'போலியான' உறுதிப்படுத்தல்களைப் பெற்று (ஐந்து வருடம் அந்தப் பகுதியில் வசிக்கின்றார்கள் என) இந்த இணைப்பை அவர்கள் சாத்தியப்படுத்திக் கொள்கின்றனர். இதற்குச் சில சட்டத்தரணிகள், கிராம அலுவலர்கள் உடந்தையாக இருக்கின்றனர்.

இங்கே இவர்கள் சட்டத்தின் பார்வையில் இருந்து பிடியிலிருந்து தப்பிக்கொள்கின்றனர். ஆனால் சட்டம் அனைத்து விடயத்திலும் தீர்ப்பிடாது. சட்டத்துக்கும் அப்பாற்பட்ட தீர்ப்புத்தான் பல இடங்களில் வலியதாக இருக்கின்றது. இந்தப் போலி இணைப்பின்மூலம் ஒரு குழந்தை கல்வியைப் பெறுகின்றது என்றால் அதில் எந்தப் பிரச்சினையும் யாருக்கும் இல்லை. ஆனால், சேர்க்கப் பட்ட குழந்தைக்குப் பதிலாக, நியாயமாக தனக்குக் கிடைத்திருக்க வேண்டிய இடத்தைப் பிறிதொரு குழந்தை இழக்கின்றது. இதுவே இங்கு விடயம். இந்தப் பெரும்பாவம் பொல்லாதது. நின்றுகொல்லும். (எ)

428 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.