மீண்டும் டெங்குப் பேரரக்கன்
மீண்டும் டெங்குப் பேரரக்கன்

வடக்கு மாகாணத்திலும், யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளிலும் டெங்கின் தாக்கம் மிகத்தீவிர மாகியிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் இவ்வருடத்தில் மட்டும் 4 ஆயிரத்து 729 பேருக்கு டெங்குத் தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், இந்த நிலைமை மேலும் மோசமாகக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் எச்சரித்துள்ளார். யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் மட்டுமல்ல, வடக்கின் அநேக மாவட்ட மருத்துவமனைகள், பிரதேச மருத்துவமனைகள் என்பவற்றில் இருந்து கிடைக்கப்பெறும் டெங்குத் தொற்றுத் தொடர்பான தரவுகள் ஆரோக்கியமானவை அல்ல. இப்போதுள்ள காலநிலை, வழக்கமான மாரிகாலங்களைவிடவும் ஆபத்தானது என்ற செய்தியைத்தான் அந்தத் தரவுகள் கட்டியம் செய்கின்றன. எல்லாவற்றையும்விட, பூச்சியியல் ஆய்வின் அடிப்படையில் டெங்குக் குடம்பிகள் தீவிரமாகப் பரவி வருகின்றன என்று வெளிப்படுத்தப்பட்டிருப்பதானது டெங்குத் தொற்று, அடுத்தசில நாள்களில் அல்லது வாரங்களில் தீவிரமாகக்கூடிய ஏதுநிலையையும் உண்டாக்கியிருப்பதையே கட்டியம் செய்கின்றது.

டெங்கு காரணமாக அன்றாடம் பல நூற்றுக் கணக்கானவர்கள் வடக்கிலுள்ள பல மருத்துவமனைகளையும் நாடிக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் பொருளாதாரச் சிதிலம் மருத்துவத்துறையை பெரும் சவாலுக்குள் தள்ளியுள்ளது. மருந்துகள் மருத்துவ உபகரணங்களுக்குத் தட்டுப்பாடென்பது கடந்த சில மாதங்களாகவே எழுதப்படாத விதியாகிவிட்ட நிலையில், இந்த மருத்துவ நெருக்கடி மற்றொரு கோணத்தில் வியாபிக்க வாய்ப்பிருப்பதைத்தான் டெங்குத் தொற்றுத் தொடர்பான மாவட்ட மாகாண தேசியத் தரவுகளும் பறை சாற்றுகின்றன. யாழ்ப்பாணத்தில் நிலவும் மக்கள் நெருக்கம், சுகாதாரமற்ற பொதுச்சூழல், மாறிப்போன உணவு முறைகள், பெருகி வரும் நோய்கள், அனைவரின் உடலிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வரும் நிலை, மக்கள் நெருக்கத்தால் மாசுபடும் சுற்றுச்சூழல், தேங்கிநிற்கும் தண்ணீர் போன்றவற்றால், மழை என்றாலே ஒருவித எரிச்சல் தோன்றிவிடுகிறது. மழை என்றாலேயே அச்சமும் பதற்றமும் சூழும் அளவுக்கு எங்களின் வாழ்க்கை மாறிப்போய் விட்டது. இதன் பிரதிபலிப்பே இன்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலும் மாவட்ட மற்றும் பிரதேச மருத்துவமனைகளிலும் எதிரொலிக்கின்றது.

கொரோனா என்பது எவ்வளவு பாரதூரமான உயிர்கொல்லி நோயோ, அதற்கு இம்மியும் குறைந்ததல்ல டெங்குக்காய்ச்சல். ஆதலால், குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகம் கொண்டிராதவர்கள் பொதுவெளிகளில் அதிகம் நடமாடுவதைத் தவிர்ப்பதோடு, டெங்கு பரவும் ஏதுநிலைகளையும் இல்லாதாக்கவேண்டும். பலவித நோய்களுடன் பலநூறு நோயாளர்கள் மருத்துவமனை வளாகத்துக்குள் தினம்தினம் சென்று திரும்புகின்றனர். பல்வேறு சூழலியல்களுடன் அவர்கள் தொடர்புறுகின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் மருத்துவமனையின் வளாகத்துக்குள் சிறுவர்கள், குழந்தைகளைத் தேவையற்றவிதமாக அழைத்துச் செல்வதை முற்றாகத் தவிர்த்தல் நலம். உங்கள் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல உங்களின் குடும்பத்தின் ஆரோக்கியத்துக்கும், உங்களின் சமூகம்சார் ஆரோக்கியத்துக்கும் நீங்களே பொறுப்பாளிகள். சுற்றுப்புறச் சூழல் துப்புரவு முதல் கடமைத்தளங்கள் வரையில் அனைத்திலும் பொறுப்புணர்வதே காலத்தேவை...!

 

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

334 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.