பாரத தலைமை அமைச்சராக இன்று மாலை மீண்டும் பொறுப்பேற்கின்றார் தலைமை அமைச்சர் மோடி ஜவகர்லால் நேருவுக்குப் பின்னர் இந்தியாவில் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் தலைமை அமைச்சராக ஆட்சியமைத்தவர் என்ற பெருமையும் இன்று மோடிக்குக்கிட்டவுள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் ஏற்படும் ஆட்சி மாற்றங்கள் ஆட்சியமைப்புகளைக் காட்டிலும், இந்தியாவில் ஏற்படும் அரசியல் மாற்றம் மிகக்கனதியானது. பிராந்திய வல்லரசு என்ற அடிப்படையிலும், தமிழர்களின் இனப்பிரச்சினையுடன் நேரடித் தொடர்புறுவதாலும் இந்தியா இன்றளவும் தமிழர்களின் நலன்களில் நெருங்கித் தொடர்புறவே செய்கின்றது. ஆனால், அதற்குரிய கனதியான வகிபங்கை பிராந்திய நலன்களைத் தாண்டிய வகையில் இந்தியா செயற்படுத்தியிருக்கின்றதா? என்று கேட்டால் அதற்கு 'இல்லை' என்பதே 'விவாதம் ஏதுமின்றிய' ஒற்றைப்பதில்.
70 ஆண்டுகால இன அடக்குமுறைகளையும், 30 ஆண்டுகால ஆயுதப்போராட்ட வரலாற்றையும் கொண்ட தமிழர்கள், சமஷ்டி அடிப்படையிலான தீர்வே தமக்குத்தேவை என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இந்தியா முன்வைத்துள்ள 13ஆவது திருத்தத்தை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மட்டுமல்லதீர்வுக்கான ஆரம்பப்புள்ளியாக ஏற்கவும் தமிழர்கள் அன்றும், இன்றும், என்றும் தயாரில்லை. ஆனால், அவ்வாறு அதிகாரங்கள் பகிரப்படாத வலுவற்ற தீர்வுத் திட்டத்தைக்கூட தமிழர்களுக்குப் பெற்றுக்கொடுக்க கடந்த 10 ஆண்டுகளில் மோடியால் முடியவில்லை என்பதே கசப்பான உண்மை. குறைந்தபட்சம் அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளைக்கூட மோடி முன்னெடுக்கவில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரையில், ஈழத் தமிழர்கள் எனப்படுவோர் பிராந்தியத்தில் தன் வல்லாதிக்கத்தைப் பலப்படுத்தவும் நிலைப்படுத்தவும் தேவைப்படும் கிள்ளுக்கீரைகள் அவ்வளவே. ஈழத்தமிழர்களுக்காக தீவிர ஈடுபாட்டுடன் செயற்பட்டால், கொழும்பு சீனாவின் பக்கம் சாய்ந்து விடலாம் என்ற எண்ணத்திலேயே தன் ஒவ்வொரு நகர்வையும் இந்தியா மேற்கொண்டுவருகின்றது. இவ்வாறான வெளிவிவகாரக் கொள்கைகள் கொண்ட இந்தியாவிடம், 13க்கும் அப்பாற்பட்ட தீர்வுகளை எதிர்பார்ப்பது முட்டாள்தனத்தின் உச்சம்தான். என்றாலும்கூட ஏதோவொரு நம்பிக்கை தமிழ்த் தலைவர்களிடம் வரலாறு நெடுகிலும் இருந்தே வந்திருக்கின்றது. இப்போதும் கூட அந்த நம்பிக்கை தொடரவே செய்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.
'அயல் நாட்டுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையை தன் வெளிவிவகாரக் கொள்கையாக வரித்துக்கொண்டுள்ள பாரதிய ஜனதா அரசாங்கம், அயல்நாடுகள் மீதான தன் கடந்த காலத்தலையீடுகள் எந்த அடிப்படையில் அமைந்தன? அந்தத் தலையீடுகளின்போது மேவி நின்ற பிரச்சினைகள் தற்போது தீர்க்கப்பட்டிருக்கின்றனவா? என்ற பொதுப் புரிதலை வளர்த்துக்கொள்ளவேண்டும். இல்லையேல், பாரதிய ஜனதா அரசாங்கத்தின் அயலுறவுக் கொள்கை, 'அயல்நாட்டுக்கு முன்னுரிமை' என்றல்லாமல் 'அயல்நாடுகளின் நலன்களுக்கே முன்னுரிமை' என்றவாறாகவே வரலாற்றில் பதியப்படும். அவ்வாறு, அயல்நாடுகளின் நலன்களை மட்டுமே கருத்திற்கொண்டு இந்தியா தொடர்ந்து செயற்படுமாயின், ஒரு போதும் அது பிராந்திய வல்லரசாக மாற்றம்பெற சாத்தியமில்லை.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.