வீழும் சனத்தொகை
வீழும் சனத்தொகை

சுதந்திரத்தின் பின்னரான வரலாற்றில் முதற்தடவையாக சனத்தொகை வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றது இலங்கை. கடந்த ஆண்டின் ஜூன் மாதத்துடன் முடி வடைந்த ஓராண்டு காலப்பகுதியில் சனத்தொகையில் 14 லட்சத்துக்கும் அதிகமான தொகை குறைந்திருக்கின்றது என்று இலங்கைப் பதிவாளர் பணிமனையின் புள்ளிவிவரங்கள் சொல்லி நிற்கின்றன. சனத்தொகை வீழ்ச்சிக்கு இலங்கையின் பொருளாதார நிலைமையால் ஏற்பட்ட புலம்பெயர்வே பெரும் காரணம் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து தற்போதும் பெரும் திரளானோர் பிற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த சனத்தொகை வீழ்ச்சித் தரவுகள் இப்போது அதிகரித்திருக்கக்கூடும். நாட்டின் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தச் சனத்தொகை வீழ்ச்சித் தகவல்களை சாதாரணமாகக் கடந்துவிட முடியாது.

இலங்கையின் உள்நாட்டுப் போரால் இலங்கைத் தமிழர்களே பெருமளவில் பிறநாடுகளுக்குப் புலம்பெயர்ந்திருந்தனர். 1987 ஆம் ஆண்டுமுதல் 1989 ஆம் ஆண்டுவரையில் இலங்கையின் தென்பகுதியில் ஏற்பட்ட அரசியல் வன்முறைகளால் குறைந்தளவிலான சிங்கள மக்கள் தான் புலம்பெயர்ந்திருந்தனர். உள்நாட்டில் ஏற்பட்ட சூழ்நிலைகளால் வாழ முடியாத இனக் குழுமங்கள் புலம்பெயர்ந்த கடந்தகால நிலைமையை விடவும் தற்போதைய நிலைமை வேறுபட்டதாக இருக்கின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ஒட்டு மொத்த இலங்கையர்களுமே புலம் பெயர்ந்து பிறநாடுகளுக்குச் செல்ல முயற்சிக்கும் தற்போதைய நிலைமை மிகவும் அபாயகரமானது.

பொருளாதார நெருக்கடி மக்கள் மத்தியில் உணவுப் பாதுகாப்புக் கரிசனையை இல்லாமல் செய்திருக்கின்றது. ஒரு குடும்பம் தம்முடைய வருமானத்தில் 75 வீதத்தை உணவுக்காகச் செலவிடுகின்றது. அதைத் தாக்குப்பிடிக்க முடியாது இலங்கை மக்கள் உணவு, மருத்துவம் மற்றும் கல்விக்கான செலவைக் குறைத்து வருகின்றனர் என்பது அண்மைய ஆய்வுகளில் அறியப்பட்டிருக்கின்றது. புலம்பெயர்வு தொடர்பான தீர்மானம் ஒரு தனிநபர் தீர்மானமாக இருப்பதல்ல. தங்களது குடும்பம் தொடர்பாக எடுக்கப்படும் சமூகத் தீர்மானமாகும். இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைமை பலரை வெளிநாடுகள் நோக்கி உந்தித் தள்ளுகின்றது. மூளைசாலிகளின் வெளியேற்றமும், தொழிற்படையின் வெளியேறலும் நாட்டின் எதிர்காலத்தைக் கேள்விக்குறி யாக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இலங்கையைப் பொறுத்தவரையில் மூளைசாலிகளின் வெளியேற்றத்தின் தாக்கம் உடனடியாகவே வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றது. மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, நிபுணத்துவம் வாய்ந்தோரின்மை போன்ற பிரச்சினைகள் எழ ஆரம்பித்திருக்கின்றன. இது உற்பத்தித் துறையினதும், சேவைகள் துறையினதும் திறனைக் குறைத்துவிடும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாட்டுக்கு இது மிகப் பெரும் தலையிடியாகவே இருக்கும்.

நாட்டிலிருந்து மனித மூலதன வெளியேற்றம் அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கம் அதைத்தடுப்பதற்குரிய எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக இல்லை.

தொலைநோக்கற்ற தீர்மானங்களால் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு ரீதியிலான சிக்கலைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் எந்தத் திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. மூளைசாலிகள் மற்றும் தொழிற்படையின் வெளியேற்றம் தொடருமானால், உற்பத்தித்துறையில் ஏற்படும் தாக்கம் நாட்டை இன்னமும் வருடக்கணக்கில் பின்நோக்கியே தள்ளும். கண்துடைப்பு வேலைகள் ஊடாக நாட்டை மீட்க முடியாது என்பதை உணர்ந்து ஆட்சியாளர்கள் காரியத்தில் இறங்க வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் சில ஆண்டுகளில் இலங்கை பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதைத் தவிர்க்க முடியாது.

(29. 03.2024-உதயன் பத்திரிகை)

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

361 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.