(புதியவன்)
கடந்த செவ்வாய்க்கிழமை (23) முதல் யாழ்ப்பாணம் கொக்குவில் தொடருந்து நிலையம் மூடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் இன்று (25) மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் தொடருந்துகள் கொக்குவில் தொடருந்து நிலையத்தை அடைந்து மீண்டும் புறப்படுகின்றன. இருப்பினும் குறித்த தொடருந்து நிலையத்தில் வழமையான செயற்பாடுகள் எதையும் மேற்கொள்ள முடியாமல் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
மேலும் இத் தொடருந்து நிலைய பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என தொடருந்து பணிமனையிலிருந்து எமக்கு கிடைத்த தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
குறித்த தொடருந்து நிலையில் இடம்பெற்ற சுமார் 20 இலட்சம் ரூபா கையாடல் தொடர்பாகவே இப் பணி இடைநிறுத்தம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
தொடருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் பிரயாணப் பயணச்சீட்டுக்களை பெற யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்துக்கு செல்லவும் என்ற அறிவிப்பொன்றும் கொக்குவில் தொடருந்து நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.