காஸாவில் ஏற்படும் உயிர்ப் பலிகளுக்கும், அழிவுகளுக்கும் இஸ்ரேல் பொறுப்பாகாது என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் மக்ரோன். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் 'காஸாவில் குண்டு வீசுவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும். அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்கவேண்டும். குண்டு வீசுதலுக்கு எந்த நீதியும் கற்பிக்க முடியாது. போர் நிறுத்தம் இஸ்ரேலுக்கு ஆதாயம் தரும். ஹமாஸ் தீவிரவாதிகளின் இஸ்ரேல் மீதான தாக்குதலைக் கண்டிக்கிறோம். அதேவேளையில் இஸ்ரேல் தற்காப்புக்காக நடத்தும் தாக்குதலை ஆதரித்தாலும் காஸாவில் அப்பாவிகள் கொல்லப்படுவதை ஏற்கமுடியாது. போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும். அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளின் தலைவர்களும் இதையே வலியுறுத்துவார்கள் என நான் நம்புகிறேன்' என்று கூறியிருந்தார். இதற்கு வழங்கியுள்ள பதிலிலேயே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:- 'காஸாவில் பொதுமக்களுக்கு நேரும் அவலங்களுக்கு ஹமாஸ், ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற அமைப்புகள் தான் பொறுப்பாகும். இஸ்ரேல் அதற்கு எவ்விதத்திலும் பொறுப்பாகாது. ஹமாஸ் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் எங்களின் மக்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் அவர்கள் பிடியில் உள்ளனர். இது மனிநேயத்துக்கு எதிரான குற்றமாகும். அதேபோல் பள்ளிகள். மசூதி மருத்துவமனைகளை ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு திட்டமிடும் மையமாக மாற்றிவைத்துள்ளனர். இஸ்ரேல், அப்பாவி பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாவதைத் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரத்துக்கு உட்பட்டு எடுக்கிறது. பொதுமக்கள் போர்ப் பகுதிகளில் இருந்து வெளியேறத் தொடர்ந்து அறிவுறுத்துகிறது. ஆனால் ஹமாஸ் ஐ.எஸ். இணைந்து பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாமல் தடுத்து அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகின்றன - என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.