[ஆதவன்]
கிளைமோர் தயாரித்த குற்றச்சாட்டில் முன்னாள் போராளி மற்றும் அதற்கு உதவியதாக ஒருவருமாக இருவர் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மன்னார், தேவன்பிட்டி, வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த ஆரோக்கியநாதன் சவேரியான் (ஜோன்சன்) (வயது - 48) என்ற முன்னாள் போராளியும், நாச்சிக்குடா, கரக்குன்றைச் சேர்ந்த தம்பு குணசேகரம் (வயது -63) ஆகிய இருவருமே பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட் டுள்ளனர்.
தம்பு குணசேகரம் வைபர் (படகுகள் செய்வதற்குப் பயன்படும் பொருள்) ஒட்டுவேலை செய்பவர். அவரின் வீட்டிலிருந்து கிளை மோர் அச்சு வைபரில் செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அச்சு வார்ப்பதற்கு ஜோன்சனே கேட்டுக் கொண்டதாக, தம்பு குணசேகரம் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.
பூக்கன்றுகள் வளர்க்கும் தொங்கும் பூந்தொட்டியாகப் பயன்படுத்துவதற்கு என்று கூறியே அதனை அச்சு வார்க்குமாறு ஜோன்சன் தெரிவித்ததாகவும், அவ்வாறு வார்க்கப்பட்ட அச்சுக்களை அவர் எடுத்துச் சென்றாரெனவும் தம்பு குணசேகரம் விசாரணைகளின் போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை- தான் வைபரில் செய்யப்பட்ட கிளைமோர் அச்சுக்களை எடுத்துச் செல்லவில்லை என ஜோன்சன் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் ஜோன்சனை கொழும்புக்கு நேற்றிரவு அழைத்துச் சென்றுள்ளனர். தம்பு குணசேகரம் கிளிநொச்சியில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். ஜோன்சன் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணியாற்றி வருகின்றார். மாவீரர் வாரத்தை முன்னிட்டு மாவீரர் பெற்றோர் கெளரவிப்பை அவர் முன்னின்று நடத்தியதாகவும் அது தொடர்பில் புலனாய்வாளர்கள் ஊரில் தகவல்களைத் திரட்டியதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை - மாவீரர் நாள் கடைப்பிடிப்புடன் தொடர்புடைய 10 பேர் வடக்கு - கிழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.