எழிலன்
40 வருடங்களுக்குப் பின்னர் முத்துஐயன்கட்டுக் குளத்தின் கீழ் உப உணவு பயிர்ச்செய்கைக்கான நீர் திறந்துவிடப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றான முத்துஜயன்கட்டுக்குளத்தில் இம்முறை போதியளவு நீர் சேமிக்கப்பட்டுள்ளதால் குளத்தின் கீழ்ப் பகுதியில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், சிறுபோக பயிர்ச்செய்கைக்கான பொதுக்கூட்டம் மாவட்ட அரசாங்க செயலர் தலைமையில் நடைபெற்று நீர் வழங்குவதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டு 16.02.20224 (நேற்று) குளத்தின் நீர் விவசாயச் செய்கைக்காக திறந்துவிடப்பட்டது.
இதேவேளை, 31.08.2024 அன்று மீண்டும் பூட்டப்படவுள்ளது. உப உணவு செய்கையாளர்களுக்கும் நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் நீரினை பெற்றுக்கொள்ள இம்முறை வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இக்குளத்தின் கீழ் 4522 ஏக்கரில் இம்முறை விவசாய செய்கை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் நெற்பயிர்ச் செய்கைக்காக 3684 ஏக்கரும் உப உணவு பயிர்ச்செய்கைக்காக 828 ஏக்கரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உப உணவு பயிர்ச்செய்கைக்காக பெயர்பெற்ற குறித்த பகுதியில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இம்முறை உப உணவு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
வேலியுடன் பயிர்ச்செய்கையும் கால்நடையுடன் ஆட்களும் பராமரிப்பு என்ற அடிப்படையில் சிறுபோக செய்கையினை விவசாயிகள் மேற்கொள்ளவுள்ளார்கள். குளத்திற்கான நீர் திறந்துவிடும் நிகழ்வு கமக்கார அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டன.
குளக்கட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் பொங்கி பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து குளக்கட்டில் நடைபெற்ற வழிபாடுகளுடன் நீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிகழ்வில் முத்துஐயன்கட்டு நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர் திருமதி மஞ்சுளா ஜொய்ஸ்குமார், பிரிவு உதவியாளர் வி.றாஜகாந்தன் , விவசாயிகள், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.