புகழேந்தி
வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள் முன்னெடுத்து வந்த உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
வவுனியாவில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி சிறைச்சாலையடியில் நிறைவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க. சுகாஸ், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் சிறைச்சாலைக்குள் சென்று, அங்கு உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவர்களுடன் கலந்துரையாடியதன் பிரகாரம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
மகா சிவராத்திரியன்று வெடுக்குநாறிமலையில் வழிபாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். தொல்லியல் சின்னங்களைச் சேதப்படுத்தினர் என்று பொலிஸாரால் புனையப்பட்ட பொய்க் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் ஐவர் கடந்த ஐந்து நாட்களாக உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
சிவ வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி சிறையில் அடைத்த வவுனியா நெடுங்கேணி பொலிஸாருக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று காலை 7. 30 மணிக்கு யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்பாக வாகனப் பேரணியாக சென்று காலை 11 மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இணைந்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்பு பேரணியாக சென்று தொல்லியல் பணிமனையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு, அங்கிருந்து வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையடியில் பேரணியை நிறைவு செய்தனர்.
இதன் பின்னர், சிறைச்சாலைக்குள் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர் அங்கு உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர். (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.