(மாதவன்)
முல்லைத்தீவு மாவட்டத்தில் குறித்த வருமானம் பெறுபவர்களுக்கான அரிசி விநியோகத்தில் பாவனைக்கு உதவாத அரிசி வழங்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்டசெயலர் அ. உமா மகேஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு அரிசி விநியோகம் இடம்பெற்று வரும் நிலையில் சில இடங்களில் காலவதியான பாவனைக்குதவாத அரிசி வழங்கப்படுவதாக குற்றசாட்டு கிடைக்கப்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் எட்டுக்கு மேற்பட்டவர்கள் அரிசி விநியோகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் ஒருவருடைய அரிசியின் சுமார் 800 பைகள் பாவனைக்கு உதவாத அரிசிப் பைகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் பாவனைக்கு உதவாத அரிசிகள் தமக்கு வழங்கப்பட்டதாக சந்தேகிக்கும் பயனாளிகள் தமக்கு வழங்கப்பட்ட விநியோகம் தொடர்பாகவும் அதனை விநியோகித்த விநியோகத்தர் தொடர்பாகவும் முழுமையான தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தரமற்ற அரிசி வழங்கப்பட்டிருப்பின் விநியோகத்தர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளரை தொடர்பு கொண்டு தெரிவிக்க அறிவுறுத்தல் வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.
இது தொடர்பாக தங்களது பூரண அவதானத்தை செலுத்தி திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.