(செல்வன்)
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொதி செய்யப்பட்ட கசிப்பு பைக்கற்றுக்களுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (21.03.2024) பிற்பகல் இடம்பெற்ற கைது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குரவில் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் கொஸ்தாபிள் பிரதீபனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையில் பொலிஸ் கொஸ்தாபல்களான (72585) ஜெயசூரிய, (74996) பணாவர, (88509) பிரதீபன், (99804) சத்துரங்க ஆகிய குறித்த பொலிஸ் குழுவினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
மறைத்து வைக்கப்பட்டு 160 சிறு சிறு பொதிகளாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த 16 லீற்றர் சட்டவிரோத கசிப்பு பைக்கற்றுக்களுடன் 31 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.