ரெலோவின் மாநாட்டில் தீர்மானம்!
ஆதவன்.
தமிழர்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளான வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில், தம்மைத்தாமே ஆளுகின்ற, சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய, சுயாட்சி அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான அரசியல் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது என்றும் இந்த இலக்கை அடைவதற்கான நிரந்தர பொறிமுறையை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, அந்தப் பொறிமுறையை இந்தியாவினுடைய மேற்பார் வையிலும் சர்வதேச நாடுகளின் பங்களிப்போடும் ஐ.நா.வின் வழிநடத்தலோடும் புலம்பெயர் உறவுகளின் ஒருங்கிணைப்போடும் உருவாக்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும் ரெலோவின் தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 11 ஆவது தேசிய மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. அந்த இயக்கத்தின் மாநாட்டுப்பிரகடனத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் வாசித்தார்.
பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
எமது தாயகப் பிரதேசத்தை எமது பாரம் பரிய வதிவிடமாகவும், எமது தனித்துவ மான இன அடையாளத்தையும், தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தையும் உறுதிப்படுத்திய இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசமைப்பில் திருத்தங்களோடு உருவாக்கப்பட்ட மாகாணசபை ஆட்சி முறைமையை முற்று முழுதாக நடைமுறைப்படுத்த அரசுக்குத் தொடர் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான நடவடிக்கைக்ளைச் செயற்படுத்தல்.
எமது இனத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை உட்பட மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் மற்றும் மனிதத்துக்கு எதிரான குற்றங்க ளால் பாதிக்கப்பட்ட நீதி கோரி நிற்கும் எமது உறவுகளுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச நீதிப் பொறிமுறைக்காகத் தொடர்ந்தும் பாடுபடுவோம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைக் கோரி நிற்கும் எம் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வது. அரச இயந்திரங்களால் எமது தாயகப் பிரதேசத்தில் தொடர்ந்து அபகரிக்கப்பட்டு வந்த காணிகளை விடுவிப்பதற்கும், தொடர்ச் சியாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்பின் விளைவாக எமது வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்ப டுவதாலும், பௌத்த சின்னங்களை நிறுவுவதன் ஊடாகவும் நமது மக்களின் வாழ்வாதாரத்தையும் இனக்குடிப் பரம்பலையும் சிதைத்து நமது சுயநிர்ணய உரிமைக்கான தகுதியைக் கேள்விக்குறி ஆக்க முயலும் செயற்பாடுகளுக்கு எதிரான சகல அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்வது.
எமது இனக் குடிப்பரம்பலின் செறிவைப் பேண எமது எதிர்காலச் சந்ததிக்கான வளமான வாழ்வை உறுதிப்படுத்தி அதனூடாக எமது இனத்தின் இருப்பை தக்க வைக்க, எமது தாயக பூமியில் பொருளாதார அபிவிருத்தியை உறுதிசெய்யும் தற்சார்பு பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கி அதை செயல்படுத்த உரிய வேலைத்திட்டங்களை மேற்கொள்வது. எமது இனத்தின் கல்வி, கலை, கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்பதோடு அவற்றை வளர்ப்பதற்கும் செழுமைப்படுத்தவும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதுடன் நமது மக்கள் நலன் சார்ந்து பிராந்திய அரசியல் உறவை வலுப்படுத்தவும், சர்வதேச நாடுகளின் ஆதரவைத் திரட்டவும் அதற்கான பூகோள அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பது. ஆகிய மேற்கூறிய எமது மக்களின் நலன் சார்ந்த அரசியல் அபிலஷைகளையும் உரிமையையும் வென்றெடுப்பதற்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் உட்பட எமது தேசியத்தை நேசிக்கும் அனைத்து தமிழ் தரப்பினரையும் ஒன்றிணைத்து புலம்பெயர் உறவுகளையும் ஒருங்கு சேர்த்து ஒரு தேசமாக எமது இனத்தைக் கட்டி எழுப்பும் பணியில் முழு முயற்சியோடு ஈடுபடுவோம் என்றும், பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(ச)
9ro8xn
h60lm4
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.