(செல்வன்)
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் மகிழூந்து ஒன்றில் சென்ற நால்வர் அங்கு நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (25) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மதுபோதையில் மகிழூந்தில் சென்ற நான்கு நபர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் சென்று எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரை தாக்க முயற்சித்ததுடன் தடுக்கச் சென்ற பொது நபர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை தாக்கி அச்சுறுத்தலாக அமைந்தது மட்டுமல்லாது எரிபொருள் இறக்குவதற்காக எரிபொருள் தாங்கி திறந்திருந்த நிலையில் இவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் பாரிய ஆபத்தை உண்டாக்கக்கூடியது. எனவே இவ்வாறான செயற்பாடுகளை உடன் கட்டுப்படுத்த வேண்டும் இல்லையேல் இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களில் மூவரை கைது செய்துள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்தனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.