புதியவன்
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மத்திய தபால் பரிவர்த்தனைக்கு கிடைக்கப்பெறும் அதிகளவிலான பொருட்களை தாமதமின்றி அனுப்பி வைக்கும் நோக்கில் ஏப்ரல் 12 ஆம் திகதி பொது விடுமுறை நாளிலும், கடமையில் ஈடுபடுவதற்கு அனைத்து தபால் ஊழியர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
கடந்த வருடம் புத்தாண்டுக் காலத்திலும் எரிபொருள் வரிசையில் நின்ற மக்கள் இந்த வருடம் ஆடை கடைகளிலும் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்யவும் திரண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டை முன்னேற்றுவதற்காக மேற்கொண்டு வரும் வெற்றிகரமான திட்டம் பலனளித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அரச தலைவர் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மத்திய தபால் பரிவர்த்தனைக்கு இந்த புத்தாண்டுக் காலத்தில் அதிக எண்ணிக்கையிலான பொருட்கள் வந்தடைந்துள்ளன.
வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிகளவில் பொருட்களை அனுப்பியுள்ளனர். புத்தாண்டு காலம் என்பதால் அந்தப் பொருட்களை துரிதமாக விநியோக்க வேண்டிய சவால் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, நெருக்கடிகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் ஏப்ரல் 12 ஆம் திகதி பொது விடுமுறையாக இருந்தாலும் அன்றைய தினம் சேவைக்கு சமுகமளிக்க தபால் மா அதிபர் மற்றும் தபால் தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
ஆயப் பணிமனை அதிகாரிகளும் இதற்கான ஒத்துழைப்பை வழங்கவுள்ளனர்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டனர். எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நின்றனர்.
ஆனால், இம்முறை புத்தாண்டுக்குள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்காமல் ஆடைகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் திரள்வதை காணமுடிகிறது.
அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் பலனாகவே இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
அரச தலைவரின் சரியான வழிகாட்டலின் கீழ் கிடைத்த வெற்றியின் பலனை மக்கள் அனுபவிக்கின்றனர்- என்றார். (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.