தங்க இடம் குடுத்தால் மடம் பிடிக்கிறது எங்கட ஆக்களுக்கு கைவந்த கலை. தொட்டுத் தொடரும் இந்தக் கெட்ட பாரம்பரியம் பற்றி ஒரு கதையை இப்ப பாப்பம்.
1986ஆம் ஆண்டு இஞ்சகடும்பிரச்சினையெண்டு யாழ்ப்பாணம் நல்லூரடியில இருந்த ஒரு குடும்பம் கனடாவுக்கு வெளிக்கிட்டிருக்கினம். தாங்கள் இருந்த வீட்ட தங்களுக்குத் தெரிஞ்ச ஆக்களைப் பராமரிக்கச் சொல்லிப்போட்டு அவை கனடா போட்டினம். மூண்டு வருசம் அவையும் நல்லாப் பராமரிச்சுக்கொண்டு வந்தவை. அப்ப வீட்டுச் சொந்தக்காரரின் தம்பி கலியாணம் கட்டிப்போட்டு, 'அண்ணை இருக்க இடமில் லாமல் நானும் மனுசியும் கஷ்டப்படுறம். ஒரு நல்ல வீடு கிடைக்கும் வரைக்கும் உங்கட வீட்ட இருக்கட்டுமோ? எண்டு 1989 இல கனடால இருந்த அண்ணையிட்டக் கேட்டிருக்கிறார். தம்பிக்கு இல்லாத வீடா? எண்டு அண்ணையும் இருக்கச்சொல்லிட்டார். அவ்வளவுதான். 'இந்தா போறம், அந்தா போறம்'எண்டு ஒவ்வொரு சாட்டுச் சொல்லிச் சொல்லியே தம்பி குடும்பம் அந்த வீட்டை விட்டு அசையவே இல்லை.
இதுக்கெல்லாம் காரணம், தம்பியாரின் துணைவியார் தான். அவான்ர 'யோகமோ' என்னவோ கனகாலமா கனடாக்காரர் ஊர்ப்பக்கம் வரவே இல்லை. கனடாக்காரரின்ர தம்பி நல்லூர் வீட்டில செத்த பிறகு, அவரின்ர துணைவி கனடாக்காரரோட எல்லாத் தொடர்பையும் 'கட்' பண்ணிப்போட்டா. காலம் முழுக்க அந்த வீட்டை தாங்களே ஆளலாம் எண்டதுதான் அவான்ர பிளான்.
ஆனால் அடுத்தவன் வீட்டை எவ்வளவு நாளைக்குத்தான் ஆட்டையைப் போட்டு வைச்சிருக்க ஏலும்? கனடா அண்ணையின்ர துணைவி, தன்ர தங்கச்சியை ஊருக்கு அனுப்பி நிலைமையைப் பார்த்திருக்கிறா .ஆனால் அப்பிடி வந்தவையை வீட்டுக்குள்ளயே விடேலையாம். அதுக்குப் பிறகு தான் அவை உசாராகி, அந்த வீட்டுக்கு முன்னால போராட்டம் எல்லாம் நடத்திப் பார்த்திருக்கினம். அப்பவும் வீட்டை அடாத்தாப் பிடிச்சு வைச்சிருக்கிறவை கதவைத் திறக் கேலையாம். அதுக்குப் பிறகு 31.03.2024 இல பொலிஸில கேஸ் போட்டிருக்கினம். வீட்டைப் பிடிச்சு வைச்சிருக்கிற அந்த 'யோகக்கார' அம்மாவை பொலிஸ் கூப்பிட்டு விசாரிக்க'நாங்கள் எப்பவோ அந்த வீட்டை வாங்கிட்டம், ஆனால் உறுதி என்னட்ட இல்லை. லோயரிட்டத்தான் இருக்கு எண்டு சொல்லிப்போட்டு வந்திட்டாவாம். ஆனால் பகிடி என்னெண்டால் அந்த வீட்டின்ர உறுதி இன்னும் வேற பேருக்கு மாத்துப்படேலை. அதோட இவ்வளவு காலமும் வீட்டின்ர உண்மையான உரிமைக்கார ஆக்களின்ர பேரில தான் சோலைவரியும் கட்டுப்பட்டிருக்கு. அதால இப்ப வீட்டின்ர உரித்துக்காரர் வழக்குப் போடிருக்கினமாம். எப்பிடியும் வழக்கு நாலைஞ்சு வருசம் இழுபடும். அதுமட்டும் அந்த வீட்டில அந்த யோகக்கார அம்மா இருக்கலாம்.
இப்பிடி அந்த வீட்டை ஆட்டையைப் போட்ட அம்மா ஆரெண்டு நினைக்கிறியள்? மேயரா இருந்த அதே யோகக்கார அம்மாதான். சும்மா சொல்லக்கூடாது அவாக்கு கடும் யோகம் தான். இல்லாட்டி வீடு, பதவி எல்லாமே அவாக்கு இப்பிடி ஈஸியா கிடைச்சிருக்குமோ? ஆட்டையப் போட்ட வீட்டில இருந்துகொண்டே, வீணை வாசிச்ச படி அந்த மாநகரத்தை ஆளுற அதிருஷ்டமெல்லாம் எல்லாருக்கும் வாய்க்குமோ? இந்த மோசடி பற்றி அந்த யோகக்கார அம்மாவின்ர கட்சித் தலைவருக்கும் வீட்டு ஓனர் ஈமெயில்' அனுப்பினவராம். அதுக்கு ஒரு பதிலுமே இல்லையாம். எப்பிடி பதில் போட ஏலும்? இவாவாவது வீட்டை ஆட்டையைப் போட்டா, அவர் ஒரு தியேட்டரையே ஆட்டையைப் போட்டவரெல்லோ.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.