கோமாதா எங்கள் குலமாதா எண்டு பசுக்களை தெய்வமா கும்பிட்ட மண்ணில, கள்ள மாடு பிடிச்சு அதுகளை கும்பலா அடைச்சு வைச்சு. வெட்டி இறைச்சியாக்கின கொல்களம் ஒண்டு யாழ்ப்பாணம் ரவுணுக்குள்ள முந்தநாள் பிடிபட்டிருக்கு. இதைப்பற்றி செய்தியளிலையும் அறிஞ்சிருப்பியள். உந்தக் கொல்களத்துக்குப் பின்னால ஆமி இன்ரலி ஜண்ட்காரர் இருக்கினமெண்டும் தகவல் வந்திருக்கும். அமாவாசைக்கும் அபூபக்கருக்கும் என்ன தொடர் பெண்டமாதிரி, மாட்டுக் கொல்களத்துக்கும் ஆமிக்காரருக்கும் என்ன தொடர்பிருக்கமுடியும்? எண்டு கனக்க யோசிச்சிருப்பியள். அங்கதான் இருக்கு விளையாட்டு.
என்னதான் ஏமசாமத்தில போய்.றோட்டில நிக்கிற மாடுகளைக் களவாப் பிடிச்சு வாகனத்தில ஏத்தினாலும், அதுகளை உந்தக் கொல்களத்துக்கு கொண்டுவாறது பெரும்பாடு. றோட்டுவழியநிக்கிற பொலிஸ்காரர் காணுவினம். சனங்கள் ஆரும் காணலாம். அதால ரூட் கிளியர் பண்ணிக் குடுக்கிற வேலையை ஆமிக்காரர் செய்திருக்கினம். ஒவ்வொரு நாளும் குறைஞ்சது நாலைஞ்சு மாடாவது உந்தக் கொல் களத்தில வெட்டுப்பட்டிருக்கு. அதில மூண்டுமாடு கொல்களக்காரருக்கு. ஒரு மாடு ஆமிக்காரருக்கு. சும்மா ரோந்து போறமாதிரி ரூட் கிளியர் பண்ணுறதுக்கு ஒவ்வொரு நாளும் ஒருமாட்டின்ர காசெண்டால் சும்மாவோ. அதால கொல்களக்காரரும் பயமில்லாமல் கனநாளா உதே இடத்திலவைச்சு, மாடுகளை வெட்டித்தள்ளியிருக்கினம். சாதாரண சாப்பாட்டுக் கடையளுக்குள்ள ஈ இருக்கோ? இலையான் இருக்கோ? எண்டு பூதக்கண்ணாடி வைச்சு தேடுற சுகாதாரப்பிரிவுக்காரருக்கும் உந்த இடம் வருசக்கணக்கா கண்ணில தெரியாதது அதிசயம்தான்.
நல்லவேளையா, உங்க இப்பிடியொரு கொல்களம் இருக்கிறதை ஆரோ ஒரு புண்ணியவான் கண்டுபிடிச்சு, பொலிஸுக்குச் சொன்னதாலதான் மிச்சமாயிருந்த மாடுகளாவது தப்பியிருக்கு. பொலிஸ்காரர் அந்த இடத்தைச் சுத்திவளைக்கேக்க கொல்களத்துக்க இருந்த பிராளைத்தான் பிடிச்சவை. அந்தாள் ஏதோ சம்பளத்துக்கு இறைச்சி பங்குபோட வந்த ஆளாம். வாலைப் பிடிச்சுக் கொண்டு மாட்டை விட்ட கதை மாதிரி, கூலிக்கு வேலை செய்ய வந்த ஆளைப் பிடிச்சுக்கொண்டு. அந்தக் கொல்களத்தை நடத்தின உண்மையான சூத்திரதாரியளை கோட்டை விட்டிட்டினம்.
அதைவிட இன்னொரு சம்பவமும் உதில நடந்தது. பொலிஸ்காரர் அந்த இடத்தை ரவுண்டப் பண்ணி. மாடுகளை ஏத்திக்கொண்டு போக வெளிக்கிடேக்க அவைக்கு ஒரு போன் வந்திருக்கு. 'எங்களுக்குத் தெரிஞ்சவர்தான் செய்தவர். காசு எவ்வளவும் தரலாம். உதுகளை விட்டிட்டுப் போங்கோ. மாடுகளை இடம் மாத்தின பிறகு இதைப் பிடிக்கிறமாதிரி வாங்கோ" எண்டும் பொலிஸ்காரரோட போனில டீல் பேசுப்பட்டதாம். அப்பிடி டீல் பேசினதும் ஆமி இன்ரலி ஜண்ட் தானாம். நல்லகாலம் அதுக்குப் பொலிஸ்காரர் ஓமெண்டேலை. முந்தி மனிசரை கடத்தி வெட்டிக் கொத்தினவை இப்ப ஆடு, மாடுகளைக் கடத்தி வெட்டிக் கொத்துகினம். வெட்டின கையும், கடத்தின காலும் சும்மா இருக்காது கண்டியளோ.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.