சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்து
ஆதவன்.
நிகழ்நிலைக் காப்புச்சட்டத்தை உடனடியாக மீளப்பெற்று மக்களின் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பாக, சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய ஆய்வாளர் ருவான் பத்திரண வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் உள்ளதாவது:-
எதிர்க்கட்சியினதும் ஆர்வக்குழுக்களினதும் எதிர்ப்பையும் மீறி நிகழ்நிலைக் காப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூக வலைத்தளத்தில் பதிவுகளை மேற் கொள்ளும் குற்றத்துக்காக ஒருவருக்கு ஐந்து வருடங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்க இந்தச் சட்டம் இடமளிக்கின்றது. இணையக் குற்றங்கள், சிறுவர் துஷ்பிரயோகம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்குடனே இந்தச்சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, ஆசிய இணைய கூட்டமைப்பு, சர்வதேச நீதிமன்றம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்றன இந்தச் சட்டத்திலுள்ள சில பிரிவுகளைப் பற்றி சுட்டிக்காட்டியுள்ளன. இந்தச் சட்டம் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு ஏற்ப அமையவில்லை. கருத்துச்சுதந்திரம், தனிநபர் சுதந்திரம் என்பவற்றைக் கடுமையாகப் பாதிக்கிறது. அத்துடன் இணையப் பாதுகாப்புக் குழுவுக்கு அளவு கடந்த அதிகாரத்தை அளிக்கிறது.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கிய வேளையில் மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக குரல் கொடுத்தார்கள். இந்தச்சட்டம் எதிர்க்கருத்துகளை இல்லாமல் செய்கிறது. அத்துடன் அதிகாரத்திலுள்ளவர்கள் இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தவும் வழி வகுக்கிறது என்றுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.