இலங்கை மருத்துவ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவராக பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவு
(புதியவன்)
நேற்று (25) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஒன்றியத்துக்கான செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கும் முதலாவது கூட்டத்தின் போது நாடாளுமன்றத்தில் புதிதாக நிறுவப்பட்ட இலங்கை மருத்துவ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள நாடாளுமன்ற ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதன் படி,
நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவ கலாநிதி உபுல் கலப்பத்தி அவரது பெயரை முன்மொழிந்ததுடன், மருத்துவ கலாநிதி சுதர்ஷினி பர்னாந்துபுல்லே அதனை வழிமொழிந்தார்.
அத்துடன், ஒன்றியத்தின் போஷகர்களாக மருத்துவ கலாநிதி ராஜித சேனாரத்ன மற்றும் சுகாதார அமைச்சர் மருத்துவ கலாநிதி ரமேஷ் பத்திரன ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன், இணை உப தலைவர்களாக மருத்துவ கலாநிதி சுதர்ஷினி பர்னாந்துபுல்லே மற்றும் மருத்துவ கலாநிதி காவிந்த ஜயவர்தன ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன், ஒன்றியத்தின் இணை அமைப்பாளர்களாக மருத்துவ கலாநிதி திலக் ராஜபக்ஷ மற்றும் மருத்துவ கலாநிதி உபுல் கலப்பத்தி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இங்கு உரையாற்றிய இலங்கை மருத்துவ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் புதிய தலைவர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிடுகையில், உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்த மருத்துவ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் இந்தியாவின் மருத்துவ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஆகியவற்றுடன் தொடர்புகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகச் சுட்டிக்காட்டினார். அத்துடன், தற்போதைய சுகாதார அமைச்சர் மேற்கொண்டுவரும் பணிகள் தொடர்பில் பாராட்டுக்களைத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் அந்தப் பதவிக்கு மருத்துவர் ஒருவர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் மருத்துவ கலாநிதி ரமேஷ் பத்திரன குறிப்பிடுகையில், இலவச சுகாதார சேவை காணப்படும் இந்நாட்டின் சுகாதார சேவையின் விருத்திக்காக கட்சி பேதமின்றி இந்த ஒன்றியத்துக்கு தலையிட முடியும் எனத் தெரிவித்தார். உலகின் சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் நாடுகளுக்கிடையில் முன்னிலையில் உள்ள இந்நாட்டின் சுகாதாரத் துறைக்கு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை மேலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான மருத்துவ கலாநிதி ராஜித சேனாரத்ன, மருத்துவ கலாநிதி சுதர்ஷினி பர்னாந்துபுல்லே, மருத்துவ கலாநிதி உபுல் கலப்பத்தி, மருத்துவ கலாநிதி காவிந்த ஜயவர்தன மற்றும் மருத்துவ கலாநிதி திலக் ராஜபக்ஷ ஆகியோர் இங்கு உரையாற்றினர். அத்துடன், நாடாளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிமனையின் பதில் பணிப்பாளர் ஜயலத் பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளும் இதன்போது கலந்து கொண்டனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.