(அமுதரசி)
நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இன்று (01) கிளிநொச்சிக்கு தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டார்.
தான் சமாதான தூதுவராக பணியாற்றிய போது கிளிநொச்சிக்கு பயணம் செய்து விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய இடங்களை மீண்டும் ஒரு தடவை பார்த்துவிட்டு செல்வதற்காக கிளிநொச்சிக்கு இன்று சென்றிருந்தார்.
இவ்வாறாக அவர் பரவிபாஞ்சானில் அமையப்பெற்றிருந்த அரசியல்துறை நடுவப் பணியகம், மற்றும் சமாதான செயலகத்தைப் பார்வையிட்டார். குறித்த இடங்களின் பௌதீக சூழல் மாறியிருந்ததன் காரணமாக அவரால் இடங்களை அடையாளப்படுத்த முடியாமல் போனதாகவும், அந்தக் காலத்தில் அவ்விடங்களில் வைத்து விடுதலைப்புலிகளின் தலைவரை சந்தித்த படங்களை இணையத்தளத்திலிருந்து தரவிறக்கி நிகழ்காலத்துடன் அவ்விடங்களை ஒப்பிட்டு பசுமையான நினைவுகளை அவர் மீட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவர் சமாதான தூதுவராக கிளிநொச்சிக்கு வருகை தந்த காலத்தில் ஈழநாதம் பத்திரிகையில் பணியாற்றிய தமிழ்ச்செல்வன் என்பவரையும் சந்தித்து தனது கடந்தகால நினைவுகளை பகிர்ந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அங்கு வசிக்கின்ற ஒரு பெண்ணிடம் நாட்டின் நிலைமை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என வினவிய போது சண்டை மட்டுமே இப்போது இல்லை, மற்றும்படி நாங்கள் எதிர்பார்த்த வேறு எதுவும் நடக்கவில்லை என்று ஒற்றை வரியில் ஆழமான ஒரு பதிலை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.