(மாதவன்)
எதிர்வரும் வாரம் குறிப்பாக எதிர்வரும் 13 ம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
இவ்வாண்டின் முதலாவது தாழமுக்கமாக இது அமையும் (இது இன்றைய நிலையில் மாதிரிகளின் அடிப்படையிலான கணிப்பாகும். இதில் சில மாற்றங்களும் நிகழலாம் என்பதனையும் கருத்தில் கொள்க) என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆனாலும் இக் காலத்தில் தோன்றுகின்ற தாழமுக்கங்கள் பங்களாதேஷ் அல்லது மியன்மாரை நோக்கியே செல்வதுண்டு. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும்.
அத்தோடு நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு வெப்பச்சலனம் காரணமாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த மழை வெப்பச் சலன மழை என்பதனால் இடி மின்னலுடன் இணைந்ததாகவே இருக்கும். எனவே இடி மின்னல் தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது நிலவும் அதிகமான வெப்பநிலை தற்காலிகமாக எதிர்வரும் வாரம் சற்று குறைவாக இருக்கும்.
எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு தற்போது நிலவும் அதிகளவிலான வெப்பநிலையே நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.