தமிழ் அரசியல் பரப்பில் இப்போது தமிழ்ப் பொது வேட்பாளர் விடயமே பிரதான பேசுபொருளாக மாறிவிருக்கிறது. கடந்த சிலமாதங்களாக ஒருவித மந்த நிலைக்குச் சென்றிருந்த தமிழ் அரசியல் வாதிகள் இப்போது பொதுவேட்பாளர் விடயத்தை ஒட்டியும், வெட்டியும் களத்தில் கருத்துகளோடு இறங்கியிருக்கிறார்கள். இதுவரை காலமும் சிங்கள வேட்பாளர்களுக்கு முட்டுக் கொடுத்து, அவர்களை அரியணை ஏற்றியும் தமிழர் தரப்பு எவ்விதத் தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. மாறாக யாரெல்லாம் தமிழர்களின் முதுகில் காலைவைத்து அரியணை ஏறினார்களோ, அவர்கள் தான் முன்னைய ஆட்சியாளர்களைவிடவும் அதிகமாக தமிழினத்தை எட்டி உதைத்தார்கள். இப்படியே முட்டுக்கொடுப்பதும், ஏமாற்றப்படுவதுமே தொடர் கதையாகிப்போன நிலையில்தான், ஒரு பரீட்சார்த்த முயற்சியாக தமிழ்த் தரப்பு பொதுவேட்பாளர் என்ற விடயத்தை இம்முறை கையில் எடுத்திருக்கிறது.
ஆனால், இந்தப் பொதுவேட்பாளர் என்ற விடயம், பல அரசியல்வாதிகளையும், அவர்களுக்கு முதுகு சொறிபவர்களையும் பதறவைத்திருக்கிறது. இறுதிப் போரை நடத்திய போர்க்குற்றவாளிகளில் முக்கியமானவரான சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை எடுத்தபோது, அதற்குக் காவடி எடுத்தவர்கள்கூட, இப்போது பொதுவேட்பாளர் என்ற விவகாரம்; தமிழர்கனின் இருப்புக்கே உலை வைத்துவிடும் என்று மண்ணெண்ணெய்பட்ட பாம்புபோல பதறித்துடிக்கிறார்கள். இந்தப் பதறலுக்கும், பொதுவேட்பாளர் விவகாரத்தைக் குழப்ப நினைப்பதற்கும் பின்னால் பல 'டீல்கள்' இருக்கவே செய்கின்றன. சிலவேளைகளில் இந்தப் பொதுவேட்பாளர் விடயம், அதனை ஒழுங்கமைப் பவர்களின் திட்டப்படி, தமிழர்களின் உரிமைக் குரலுக்கான வெற்றிகர அடையாளமாக மாறிவிட்டால், இதுநாள்வரை ஆளும் தரப்புக்கு எவ்வித நிபந்தனையுமில்லாமல் ஆதரவு கொடுத்த தங்களது அரசியல் வங்குரோத்துத்தனம் வெளிப்பட்டுவிடும் என்பது இந்தப்பதறல்களுக்கான காரணங்களில் முக்கியமானது. அவ்வாறு தங்களின் கையாலாகத்தனம் அம்பலமாகிவிட் டால் அவர்களால் அரசியல் செய்யமுடியாதே. அதைவிட இன்னொரு காரணமும் இருக்கின்றது. தமிழ்த் தரப்பை ஒரு சுயமுடிவை எடுக்கவிடாமல், எப்போதும் தென்னிலங்கை அரசியல்வாதிகளின்மீது தங்கியிருக்கும் நிலையை உண்டாக்கும் நிகழ்ச்சிநிரலை சில தமிழ் அரசியல்வாதிகளும், சில கருத்துருவாக்கிகள் என்று சொல்லப்படுவோரும் செவ்வனே செய்து வந்தார்கள். அதற்காக அவர்களுக்குப் பதவி, அதிகாரம், பணம் என்பன திரை மறைவில் தாராளமாக வழங்கப்பட்டன. இப்போது, வாக்குகளால் தோற்றாலும் இலட்சியத்தால் வெல்லும் உத்தியோடு களமிறக்கப்படும் பொதுவேட்பாளரால், இந்தச் சுகபோகங்கள் இல்லாமற்போய்விடும். அப்படியானால் அவர்களுக்கு பொதுவேட்பாளர் என்ற சொல்லைக் கேட்டவுடனேயே உதறல் எடுக்கத்தானே செய்யும்.
இந்தச் சமயத்தில்தான் தமிழ்த்தரப்பு ஒரு தெளிவான முடிவை எடுக்கவேண்டும். பொதுவேட்பாளர் என்ற விடயத்தை தனியே அரசியல் தரப்புகள், புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகள் என்ற வட்டத்துக்குள் மாத்திரம் வைத்திராமல், அதனை மக்கள் மயப்படுத்தப்பட்டதாக, பொதுவான கருத்து நிலையாக வளர்த்தெடுக்கவேண்டும். அப்போதுதான் பொதுவேட்பாளர் என்ற எண்ணக்கரு பூரண வெற்றியைத் தருவதோடு, திட்டமிட்டபடி தமிழ் மக்களின் உரிமைக்குரலாகவும் எழுச்சிபெறும். கூடவே பொது வேட்பாளர் விடயத்தை எதிர்க்கும் 'டீல்'காரர்களை இனங்கண்டு, அவர்களை தமிழ் அரசியல் பரப்பில் இருந்து அகற்றி, நிரந்தரமாக அஞ்ஞாதவாசத்துக்குத் தள்ளவேண்டும். இல்லையேல்; கூடஇருந்தே பொது வேட்பாளர் விடயத்தைக் குழப்பி, நீர்த்துப்போகச் செய்துவிட்டு, தமிழ்த் தரப்பை தொடர்ந்தும் தென்னிலங்கையை நம்பியிருக்கும் அரசியல் வெறு மைக்குள் வீழ்த்திவிடுவார்கள். இது மிகக் கவனமாகவும் நிதானமாகவும் பயணிக்க வேண்டிய தருணம்...!
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.