தமிழர்களுக்கு வலிகளையும் வேதனைகளையும் தந்த மாதம், இந்த மே மாதம் . 15ஆண்டுகளுக்கு முன்னர் ஒடுக்கப்பட்ட குறுகிய நிலப்பரப்புகள் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நாற்திசையும் சிறிலங்கா படைகளால் முற்றுகையிடப்பட்டிருந்த காலம், மூச்செடுப்பதற்குக்குக்கூட சுத்தமான காற்றில்லை. அந்தக் காற்றெங்கும் கந்தகநெடியும், பிண வாடையுமே நிறைந்திருந்தன. குருதிதோய்ந்த மண்ணும், அவலக்குரலும் மாத்திரமே எஞ்சிக் கிடந்த சூழல் அது. தமிழ் மண்ணில் பிறந்ததைத்தவிர வேறெந்தப் பாவமும் செய்யாத பிஞ்சுகள் கொத்துக் குண்டுகளால் கொல்லப்பட்ட அவலங்கள் அரங்கேறி 15ஆண்டு கடக்கப்போகின்றது.
கண்முன்னே பெற்றோரைப் பறிகொடுத்த குழந்தைகள், மனைவியின் கண்முன்னே கணவன் துடி துடித்து உயிரிழந்த அவலம், கணவன் முன்பாக மனைவி உயிர்மாய்த்த சோகம் எனப் பெரும் துயரைத்தந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிக்க தமிழர் தாயகம் தயாராகின்றது. கடந்த 14 ஆண்டுகளாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை எந்த நெருக்கடி வந்தாலும், நினைவுகூர்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். தங்கள் இழப்பு நீதிகோரிய அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றார்கள். வலிகளை ஏற்படுத்திய அந்தப் பேரழிவை அடுத்த சந்ததிக்கு சொல்லிக்கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆனால் நீதிக்கான போராட்டமோ கழுதை தேய்ந்து சுட்டெறும்பாவதைப் போன்று தேய்ந்து செல்கின்றது. நினைவேந்தலுக்கான எழுச்சியும் அடுத்தடுத்த தலைமுறைகளிடம் குன்றிச் செல்கின்றது. எதைச் சிங்கள தேசமும், சர்வதேச சமூகமும் எதிர்பார்க்கின்றதோ அதற்கு உடந்தையாகிச் செல்கின்றது எமது இளம் சமூகம். காலத்தை இழுத்தடிப்பதன் ஊடாகவும், மடைமாற்றத்தின் ஊடாகவும் நீதி கோரிய பயணத்தை சிலர் திசை திருப்பத்துடிக்கின்றனர். அவலங்களை மறந்து களியாட்டங்களுக்குள் இளம் சமூகத்தை தள்ளிவிடுகின்றனர். முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்தது எம் உறவுகள்தான். அந்த உறவுகளின் உடலங்கள் மீது இன்று கொண்டாட்ட மனநிலையில் எமது இளம் சமூகம் இருப்பது வேதனைக்குரியது.
அரசியல் கட்சிகளால் நினைவேந்தல் என்பது தமது வாக்குப்பொறுக்குவதற்கான நிகழ்வு என்ற வரையறைக்குள் சுருங்கிவிட்டதால், நீதிக்கான பயணத்தை அவர்கள் கைவிட்டுவிட்டார்கள். வாக்குக்காக நினை வேந்தல்களை நடத்துவதால் நினைவேந்தலின் ஓர்மம் - அதன் ஆன்ம பலம் என்பனவும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன. நினைவேந்தல்கள் என்பவை எங்களுக்கு நடந்தவற்றை அடுத்த சந்ததிக்கு வெறுமனே எடுத்துச் சொல்லுவதாக மாத்திரம் இருக்கக்கூடாது. அந்த வலியை அவர்கள் மனதார உணரவேண்டும். அவ்வாறானதொரு கொடுமை தங்களுக்கு ஏற்பட்டிருந்தால் எப்படியிருக்கும் என்பதை அறியவேண்டும். அதைச்செய்வதன் ஊடாகவே, இந்த நினைவேந்தல்களை அர்த்தமுள்ள தாக்கலாம். அவ்வாறு அர்த்தமுள்ளதாக்குவதன் ஊடாகவே அதன் நீதிக்கான போராட்டமும் உத்வேகம் உடையதாக மாறும். நீதி கோரும் நெஞ்சத்து நெருப்பு அணையாமல் இருக்கும். கடந்த 14 ஆண்டுகளில் இதைச் செய்யத் தவறியதன் விளைவே இன்று எமது கையிலிருந்து நீதிக்கான பயணம் வழிமாறிச் செல்வதற்குக் காரணம். இம்முறையாவது கடந்த காலத் தவறுகளைக் களைந்து ஆர் ஆத்மார்த்த ரீதியாக நினைவேந்தல்களை முன்னெடுக்கவேண்டும். கடமைக்தாக வெறும் பகட்டுக்காக நினைவேந்தலைக் கடைப் பிடிப்பதை விடுத்து அதை உனப்பூர்வமாக ஒவ்வொருவரும் நினைவுகூரவேண்டும்.
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.