தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என அழைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பும் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் எஸ்.ஜே.சூர்யாவை இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லதனம், நகைச்சுவை. குணசித்திரம் என மூன்றையும் கலந்து படத்தில் அசத்தி இருக்கிறார் என புகழ்ந்து பேசியிருந்தார். இப்படி வில்லனாக நடித்து கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார்.
குறிப்பாக அடுத்ததாக, இந்தியன் 2, கேம்செஞ்சர், d50 ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த திரைப்படங்களை எல்லாம் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா மலையாள சினிமாவுக்கு செல்லவுள்ளார். மலையாள சினிமாவில் ஒரு பெரிய டாப் நடிகர் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளாராம்.
அந்த மலையாள நடிகர் வேறு யாரும் இல்லை மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சுரேஷ் கோபி தான். இதுவரை 250 படங்கள் நடித்திருக்கும் சுரேஷ் கோபி அடுத்ததாக தன்னுடைய 251-வது படத்தில் நடிக்கவிருக்கிறாராம். அந்த திரைப்படத்தில் தான் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவை வில்லனாக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துவிட்டால் அந்த மலையாள படத்திற்கான அறிவிப்பு வரும் போது எஸ்.ஜே.சூர்யாவின் பெயரும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, தமிழ் சினிமாவில் வில்லனாக கலக்கி வரும் இவருக்கு தமிழில் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த சூழலில் அவர் மலையாள சினிமாவிலும் நடித்தால் அங்கேயும் அவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.