பிக்குகள், இராணுவம் படையெடுப்பு
மீண்டும் ஆக்கிரமிப்புக்குள் வெடுக்குநாறி ஆதிசிவன்
சப்பாத்துக்கால்களுடன் சிவலிங்கத்தைப் பார்வையிட்டனர்
(ஆதவன்)
வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்குள் இராணுவத்தின் பாதுகாப்புடன் பிக்குகள் தலைமையிலான குழு நேற்று வருகை தந்துள்ளது. அந்த இடம் தமக்குரியது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கொழும்பிலுள்ள தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் மெதகொட அபய திஸ்ஸ தேரர், சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாராதிபதி கல்கமுவ சாந்த போதி தேரர் உள்ளிட்ட குழுவினரை இராணுவ உழவியந்திரத்தில் இராணுவப் பாதுகாப்புடன் வெடுக்குநாறிமலைக்கு அழைத்துச் சென்றனர். இராணுவத்தினர் இவ்வாறு அழைத்துச் செல்வதை அறிந்த ஆலயத்தின் நிர்வாகத்தினரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
பிக்குகள் தலைமையிலான குழுவினர் இது தங்களது இடம் எனத் தெரிவித்து அந்தப் பகுதியைச் சுற்றி பார்வையிட்டதுடன், ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் சிவலிங்கம் அமைந்துள்ள பகுதிகளிலும் பாதணிகளுடன் நடமாடியுள்ளனர். அந்தக் குழுவினரின் கருத்தை மறுத்த ஆலய நிர்வாகத்தினர் இது தமது மூதாதையர்களால் பூர்வீகமாக வழிபடப்பட்டு வந்த பிரதேசம் என இதன் போது தெரிவித்திருந்தனர். ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிவலிங்கம் பெயர்க்கப்பட்டு அங்கிருந்த இந்து கடவுள்களின் சிலைகள் சேதப்படுத்திய சம்பவம் கடந்த ஆண்டு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.