செல்வன்.
மகளிர் தினமான இன்று வெள்ளிக்கிழமை(08) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உள்ள சுற்றுவட்ட பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
மகளிர் தினம் எமக்கு துக்கத் தினம் என தெரிவித்து மகளிர் தினமான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த 2017ஆண்டு மார்ச் 08ஆம் திகதியன்று ஆரம்பித்த தொடர் போராட்டமானது ஏழு ஆண்டுகள் பூர்த்தியாகி இன்று எட்டாவது ஆண்டாக இடம்பெறுகிறது.
இந்நிலையில் இன்று தமது ஏழு ஆண்டு தொடர் போராட்டத்தை நினைவு படுத்தியும் இன்றைய மகளிர் தினத்தை துக்கத் தினமாக தெரிவித்தும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களை சேர்ந்த உறவினர்கள், தென்பகுதியில் இருந்து வருகை தந்த மதகுரு செறாட் ஜெயவர்த்தன உள்ளிட்ட குழுவினரும் இணைந்திருந்தனர் .
போராட்டத்தின் போது இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள், நீதி தேவதை ஏன் கண்மூடி விட்டாய்?சர்வதேசமே இன்று பெண்கள் தினமா? பெண்கள் ஒடுக்கப்படும் தினமா?, முடிவில்லா துயரம் தான் தமிழ் தாயின் தலைவிதியா?, 55 ஆவது தொடரிலாவது எமக்கு நீதி கிடைக்குமா?, கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும், பெண்கள் நாட்டின் கண்களா ? இல்லை கண்ணீருக்காக கண்களா? போன்ற பல்வேறு வாசகங்களையுடைய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.