புதியவன்
சீன அரச தலைவர் ஜி ஜின்பிங்க்கும் இலங்கை தலைமை அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பீஜிங்கில் இடம்பெற்றது.
இதில், சர்வதேச விவகாரங்களின் போது, ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் நட்புறவு, அமைதி மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய கொள்கைகளின் கீழ் தொடர்ந்து செயற்பட இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது.
இருதரப்பு உறவுகள், நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர வினைத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அந்தக் கொள்கையின்படி செயற்படுவது இரு நாடுகளுக்கும் சிறந்த முன்மாதிரியாக இருக்கும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இலங்கையின் அபிவிருத்திக்குத் தேவையான திட்டங்களை முன்வைக்கும் பட்சத்தில் உடனடியாக அதற்கு சீனாவின் ஆதரவு வழங்கப்படும் என்று சீன அரச தலைவர் உறுதியளித்தார்.
அரசியல் மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறைமை ஆகியவற்றின் பாதுகாப்புக்காக சீனா எப்போதும் முன்நிற்கும் என்றும் சீன அரச தலைவர் தெரிவித்தார்.
சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்த இந்தக் கலந்துரையாடலின் போது சீனாவுக்கு ஆதரவளித்த தலைமை அமைச்சரின் தந்தையின் தலைமுறையினருக்கு சீன அரச தலைவர் நன்றி தெரிவித்தார்.
முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் போது வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் கடன் மறுசீரமைப்பு வசதிகளை வழங்கியமைக்காக சீன அரச தலைவருக்கு தலைமை அமைச்சர் தனது நன்றியை வெளிப்படுத்தினார்.
அரச தலைவர் ணில் விக்ரமசிங்கவின் சீனப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் தலைமை அமைச்சர் விளக்கமளித்தார்.
பாடசாலைக் கல்வி, விவசாயம், சுகாதாரம், தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் சமயம் ஆகிய துறைகளில் சீன அரச தலைவர் ஜி ஜின்பிங் வழங்கிய ஆதரவுக்கு தலைமை அமைச்சர் நன்றி தெரிவித்தார்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.