இலங்கையில் தற்போது நிலவும் வெப்பத்துடனான காலநிலை அடுத்த மாதத்தின் முதலிரு வாரங்களில் மேலும் அதிகரிக்கலாம் என்றும் 40 செல்சியஸூக்கும் மேல் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கின்றது. எனின், 40 செல்சியஸை விடவும் மேலான ஆபத்தைத்தான் நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வெப்பநிலை மற்றும் உணர் வெப்பநிலை என இரண்டு விடயங்கள் இருக்கின்றன. வெப்பநிலையைப் பார்க்கிலும் உணர்வெப்பநிலை வீரியம் மிக்கது என்பதுடன் ஆபத்தானதாகவும் காணப்படுகின்றது. ஒரு தார் வீதியில் நாம் நடந்து செல்கின்ற போது சூரிய வெம்மையுடன் சேர்ந்தவாறாக தார் வீதியின் வெம்மையையும் உணரத் தலைப்படுகின்றோம். இதுவே வெப்பநிலைக்கும், உணர்வெப்பநிலைக்கும் இடையிலான வேறுபாடு.
வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் சக்தி மனித குலத்திடம் இதுவரை வாய்க்கவில்லை. இது சூரியனுடன் நேரடித் தொடர்புடைய விடயம். பல மில்லியன் பழைமைமிக்க வாழ்வியலில், இப்போது தான் மனிதன் நிலவின் தென்துருவத்தில் தன் கருவியைக் களமிறக்கியுள்ளான். ஆனால், மனித குலத்தைப் பெரிதும் வாட்டி வதைக்கும் உணர்வெப்பநிலையை எம்மால் மிகமிக இலகுவாகவே கட்டமைக்க- கட்டுப்படுத்தமுடியும். அதைக் கட்டுப்படுத்துவதும், கட்டறுக்க வைப்பதும் எம் கரங்களிலேயே தங்கியிருக்கின்றது.
மனிதர்கள், உயிரினங்கள், வனங்கள், வனப்புகள் இவை அனைத்தும் இணைந்தது தான் பூமி. இதில் ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை. இதைத்தான் உயிர்ப்பல்வகைமை என்கின்றோம். இந்த உயிர்ப்பல்வகைமை, ஒரு ரயில் தண்டவாளத்தின் இருமுனைகளைப் போன்று சமாந்தரமாகப் பேணப்படுவதிலேயே பூமியின் இருப்பும் எதிர்காலமும் தங்கியுள்ளது. ஆனால், இன்றோ மனிதனின் தேவைப்பாடுகள் மிதமிஞ்சி அதிகரிக்க அதிகரிக்க இதர உயிரினங்களினதும், வனப்புகளினதும் வனங்களினதும் செறிவும் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே செல்கின்றன. எம் பள்ளிகாலத்தில் நாம் அனுதினம் விளையாடித் திரிந்த மைதானங்களில் இப்போது கட்டடக்காடுகளே எஞ்சி நிற்கின்றன. மரங்கள் வகைதொகையின்றி வெட்டிச்சரிக்கப்பட்டுவிட்டன. சிறுகுளங்களாக இருந்த பகுதிகள் தற்போது வணிக வளாகங்களாக மாறி விட்டன. சூழலின் பல்வகைமைக்கும் சமநிலைக்கும் ஊறுவிளைவிக்கும் அத்தனை செயற்பாடுகளும் - செயற்கையான மாற்றங்களும் எம் கண்ணெதிரே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
குளங்கள், ஆறுகளில் இருந்து தனக்குத் தேவை யான நீரை எடுத்துக்கொண்ட இயற்கை, இப்போது எம் அடிப்படை நீராதாரக் கட்டமைப்புகளில் கைவைக்கத் தலைப்பட்டுள்ளது. ஆனால் இதிலிருந்து எம்மைத் தற்காத்துக்கொள்ள என்ன நடவடிக்கை களை நாம் மேற்கொண்டுள்ளோம் என்ற வினாவே இன்று பூதாகரமாக எஞ்சிநிற்கின்றது. வடக்கில் மரநடுகைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன தான். ஆனால், ஒரு விதையை மண்ணுக்குள் புதைத்து விட்டாலோ? அல்லது ஒரு சிறு மரத்தை கமராக்களுக்கு முன்னர் நட்டுத் தண்ணீர் ஊற்றிவிட்டாலோ அது மரநடுகை என்றாகி விடுமா? என்ற பொதுப்புரிதலை நாம் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். மரநடுகைத் திட்டங்களின்போது நடப்பட்ட எத்தனை மரங்களுக்கு, மரநடுகையின் பின்னரான பராமரிப்பு வழங்கப்படுகின்றது?
வெப்பம் எம்மை வாட்டிவதைக்கக்கூடா தென்றால் உணர் வெப்பநிலையின் ஆபத்தம்சங்களை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். மரங்களின் செறிவை அதிகரியுங்கள். நாம் வாழ்வதற்காகவேனும், குளங்களையும் நீரேந்து பகுதிகளையும் வாழவிடுங்கள்.
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.