நாட்டுக்குப் பொருத்தமான கல்விமுறையொன்று ஏற்படுத்தப்படுவது அவசியம். ஆதலால், தேவையற்ற அரசியல் அழுத்தங்களைத் தவிர்த்துவிட்டு இணையத் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை மையப்படுத்திய கல்வியை வளர்த்தெடுக்க அனைவரும் ஓரணியில் ஒன்றுபடவேண்டும் என்பதாக வலியுறுத்தியிருக்கின்றார் ஜனாதிபதி ரணில்.
உலகளவில் இந்தத் தசாப்தத்தில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற அநேக கண்டுபிடிப்புகள் போருக்கானவையோ அல்லது வணிக நோக்கத்துக்கானவையோ அல்ல. மாறாக கல்விக்கானவையாகவே இருக்கின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு செயற்கை நுண்ணறிவு இந்தத் தசாப்தத்தில் அபரிமிதமான வளர்ச்சியைக் காட்டிவரும் பின்னணியில், உலகநாடுகள் அனைத்தும் தங்களின் கல்விக் கட்டமைப்பை மறு பரிசீலனைக்கும் - திட்டமிடலுக்கும் -கட்டமைப்புக்கும் உட்படுத்தி வருகின்றன. உலகின் மிகச்சிறந்த கல் விக்கொள்கையைக் கொண்ட ஸ்கன்டிநேவிய நாடு கள்கூட அடுத்தகட்டத்துக்குப் பயணப்படுவதற்காக பல மில்லியன் டொலரை ஒதுக்கியுள்ள பின்னணியில், இலங்கை இன்னமும் மூன்றாம் தலைமுறைக் கல்விக்குள் தன்னை மட்டுப்படுத்தி வைத்திருப்பது அபத்தமானது. ஆதலால், ஜனாதிபதி ரணிலின் கருத்துகளும் வலியுறுத்தல்களும் சரியானவையே.
ஆனால், 'எல்லாமாடும் ஓடுதெண்டு கந்தையரின் பேத்தைக்கண்டும் ஓடிய கதையாக' இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆகிவிடக்கூடாது என்ற தெளிவையும் -புரிதலையும் இலங்கையின் ஆட்சியாளர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தை மிக இலகுவாக ஒரேயொரு பாடத்திட்டத் தின் மூலம் மாணவர்கள் மத்தியில் கொண்டுசென்று சேர்ப்பிப்பதற்கு அமெரிக்காவாலும், கனடாவாலும், ஐரோப்பிய தேசங்களாலும், ஸ்கன்டி நேவியநாடுகளாலும் முடிகின்றதென்றால், அங்கே செயற்கை நுண்ணறிவைக் கற்பிப்பதற்கான அடித்தளம் பலமாக ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதே பொருள். கல்விக் கட்டமைப்பில் சமச்சீரான வளப்பங்கீடு உடைய அந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் 'உச்ச நவீனத்துவ' மாற்றங்களை அனைத்து மாணவர்களும் சிரமமின்றி மிக இலகுவாக உள்வாங்கக்கூடியதும் ஏனைய மாணவர்களுடன் இணைந்து கற்றல் நடவடிக்கைகளை
முன்னெடுக்கக்கூடியதுமான தளம் அங்குள்ளது. ஆனால் இலங்கையில்....?
இலங்கையைப் பொறுத்தவரை தலைநகர் கொழும்பில் உள்ள மாணவர்கள் ஒருவிதமான வளப்பலத்தைக் கொண்டிருக்கின்றனர். முல்லைத்தீவு, கிளிநொச்சியில் உள்ள மாணவர்கள் இன்னொரு விதமான வளப்பலத்தைக் கொண்டிருக்கின்றனர். மலையக மாணவர்களின் கதையோ வேறுவிதமாக உள்ளது. இவ்வாறிருக்கையில் செயற்கை நுண்ணறிவையும், இலத்திரனியல் தொழில் நுட்பத்தையும் மையப்படுத்திய இந்தக் கல்வியை நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் எவ்வாறு ஏற்றத்தாழ் வின்றிக் கற்றுக்கொள்வார்கள்? ஜனாதிபதி ரணில் வலியுறுத்தும் மாற்றம் மிக அவசியமும் தவிர்க்கப்பட்ட முடியாததும்தான். ஆனால், அந்த மாற்றத்தின் வெற்றியைத் தீர்மானிக்கக்கூடிய வளப்பங்கீட்டையும் அதன் உறுதிப்பாட்டையும்தான் முதலில் சரிசெய்து கொள்ளவேண்டும்.
இலங்கைத் தீவின் 30க்கும் குறையாத வருடங்களை உள்நாட்டுப் போர் விழுங்கியபோதிலும் எழுத்தறிவிலும் படிப்பறிவிலும் இலங்கையர்கள் ஆசியப் பிராந்தி யத்திலேயே உயர்சராசரியுடன் தனித்து நின்ற கால மொன்று இருந்தது. மழைக்குப் பின்னரான தூவானம் போன்று இன்றுவரை அந்தப் பெருமை எம்மைத் தொடர்கின்றபோதிலும், இந்தக் கற்றறிவு வீதமும் அதுசார் பெருமைகளும் இனிவரும் காலத்தில் இதேபோன்று பேணப்படுமா...?
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.