(எழிலன்)
திஸ்ஸ ராஜமஹாவிகாரை காணி தொடர்பான சிக்கல்கள் பற்றி தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார்
மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்கு
யாழ் குடாநாட்டில் பழைமையான விகாரையாகக் காணப்படும் காங்கேசன்துறையிலுள்ள திஸ்ஸ
ராஜமஹாவிகாரையின் காணி தொடர்பான சிக்கல்கள் பற்றி தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார்
மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) சரத் வீரசேகர
தலைமையில் (2024.03.05) ஆம் திகதி கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
திஸ்ஸ ராஜமஹாவிகாரை என்பது பழைமையை வரலாற்று பெறுமதிமிக்க விகாரை என்பதுடன்,
சங்கமித்தை ஜயஸ்ரீ மஹாபோதிக்கு வருகை தரும்போது ஓய்வுக்கு தரித்திருந்த இடத்தில் இந்த
விகாரை நிர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் விகாரையொன்றை அமைக்குமாறு
தேவானப்பியதிஸ்ஸ மன்னனுக்கு அறிவித்துள்ளதாகவும் புராணக்கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், முதலாவது தமிழ் தம்ம பாடசாலை இந்த விகாரையிலேயே ஆரம்பிக்கப்பட்டமையும்
சிறப்பாகும். எனினும், தற்போது ஒவ்வொரு போயா தினங்களிலும் தமிழ் அரசியல்வாதிகள் குழுவாக திஸ்ஸ
ராஜமஹாவிகாரைக்கு வந்து யாத்திரிகர்களை தடுக்கும் வகையில் செயற்படுவதாகவும், ஆரம்பத்தில்
அது சிறிய குழுவாக இருந்த போதும் காலப்போக்கில் அது சுமார் நாற்பது பேர் கொண்ட குழுவாக
மாறியுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார். இது தொடர்ந்தும் இடம்பெறுவது தேசியப் பாதுகாப்புக்கு
அச்சுறுத்தலாகும் என அவர் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடல் மூலம் திஸ்ஸ ராஜமஹாவிகாரை அமைந்துள்ள காணி தொடர்பில் பல்வேறு
தரப்பினரிடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றமை தெரியவந்தது. விகாரை அமைந்துள்ள
காணியில் 13 தனியார் காணி உரிமையாளர்கள் (உறுதிபத்திரங்களுடன்) இருப்பதாக வலிகாம்
வடக்கு பிரதேச செயலாளர் தெரிவித்தார். அத்துடன், இராணுவ அதிகாரிகள் குறிப்பிடுகையில்,
திஸ்ஸ ராஜமஹாவிகாரைக்கு பல ஏக்கர் அளவான காணிகள் சொந்தமானது எனவும், பழைமையான
நூல்கள், வரைபடங்கள் மற்றும் ஏனைய மூலாதாரங்களிலும் இந்த விகாரை தொடர்பான விடயங்கள்
குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இராணுவத்தினர் மேலும் தெரிவித்ததாவது, இந்த விகாரைக் காணியில் தனியார் காணி
உரிமையாளர்களின் காணிகள் இல்லை எனவும், காணி எல்லையில் அவ்வாறான காணிகள் இருக்கக்
கூடும் எனவும் தெரிவித்தனர். அந்தக் கருத்துக்களுக்கு முரணான கருத்துக்களை நாடாளுமன்ற
உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். திஸ்ஸ ராஜமஹாவிகாரை அமைந்துள்ள
காணியில் 16 தனியார் காணி உரிமையாளர்களின் காணிகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த விகாரையில் தனியார் காணிகள் காணப்படுமாயின் அந்தக் காணி உரிமையாளர்களுக்கு
அதனை அண்மித்த வேறு பகுதியில் காணிகளை வழங்குவதற்கும், காணியின் எல்லைக்கு தனியார்
காணிகள் உள்வாங்கப்பட்டிருப்பின் அவற்றை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும் குழுவினால்
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ,(பேராசிரியர்)
சன்ன ஜயசுமன, சார்ள்ஸ் நிர்மலநாதன், (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட,
நிமல் பியதிஸ்ஸ, ஜயந்த சமரவீர ஆகியோரும், புத்தசாசன, சமய மற்றும் கலாசார
அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபதிரன, நில அளவையாளர் தலைமையதிபதி
உதத் பெரேரா, வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.