(மாதவன்)
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்கள் (23)நேற்றையதினம் ஊடகம் ஒன்று பொய்யான செய்தியை வெளியிட்டதாக கூறி தனது முகநூல் கணக்கில் பதிவு ஒன்றினை பிரசுரித்திருந்தார். அந்த பதிவில் உள்ளாவது,
"ஊடகத்தின் பொறுப்பற்ற தன்மை
யாழ் போதனா மருத்துவமனை போன்ற மனிதாபிமான சேவைகள் செய்யும் நிறுவனங்களின் சேவைகளை சிதைப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபடும் "தமிழ்வின்" போன்ற ஊடகங்களின் பிழையான செய்தி பற்றி மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
உண்மையான நிலைப்பாட்டை ஆராயாமல் செய்திகளை வெளிடுவது சுகாதார சேவையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக மேற்படி செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதற்கு அப்பால் இலவச சேவையை சிதைக்கப்படுவதனை ஆசிரியர் உணர வேண்டும்.
குற்றம் சுமத்தி எழுதுவது இலகுவான விடயம்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் தினம் சிகிச்சை பெறும் நிலையத்தில் ஒரு சில தவறுகள் நடந்தால் அதனை எமக்கு சுட்டிக் காட்டலாம். நாம் அவற்றை சீர் செய்ய நடவடிக்கை எடுப்போம்.
சேவைக்காக பணியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள், சம்பந்தப்பட்டவர்களின் விளக்கங்கள் என்பவற்றை கருத்தில் கொள்ளாமல் அடிக்கடி போலிச் செய்திகளினை பரப்பி ஊடகத்தை நடத்துவது ஊடக தர்மம் அல்ல.
இது விடயமாக ஆராய்ந்த பின்னர் மேற்படி ஊடகம் மீது நம்பிக்கையான தகவலைப் பெற முடியாது என்பது எமது நிலைப்பாடு.
இந்த பதிவின் பின்னர் தமிழ்வின் யாழ் போதனா மருத்துவமனை மீது கடுமையான விமர்சனங்களை கொண்டு வரும். நீங்கள் செய்தியை வாசிக்கலாம். ஆனால் நம்பகத்தன்மையை கைவிடுங்கள்" - என்றுள்ளது.
ஆனால் இதுவரை, யாழ். போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் உத்தியோகபூர்வமாக, அந்த ஊடகத்தை அணுகி செய்தி குறித்து விளக்கம் கேட்கவோ அல்லது அந்த செய்தி பொய்யானது என அறிக்கையையோ வெளியிடவில்லை. இருப்பினும் குறித்த செய்தி உண்மை என அந்த ஊடகம் மீண்டும் உறுதிப்படுத்தி இருந்தது.
அத்துடன் குறித்த செய்தியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பொலிஸ் தரப்பினை தொடர்புகொண்டு வினவியவேளை அந்த செய்தி உண்மை என அவர்களது தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
யாழ். போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் இவ்வாறு முகநூலில் பதிவிட்டிருந்த நிலையில் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும், தொடர்ச்சியாக யாழ். போதனா மருத்துவமனையில் இடம்பெறும் தவறுகளை தமது கருத்தின் மூலம் சுட்டி காட்டியதுடன் யாழ். போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்களின் நிர்வாகத்தில் திறனற்ற நிலை காணப்படுவதாக தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
காரைநகர் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் விபத்தில் சிக்கி யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுந்தினம் (22) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் விசாரணைகள் எவற்றையும் மேற்கொள்ளாமல் மருத்துவமனை நிர்வாகம் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தது.
இந்நிலையில் உறவினர்கள் சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு ஏற்பாடுகளை செய்தவேளை, நீதிமன்றத்தினால் சிறப்புக் கட்டளை பிறப்பிக்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் மீண்டும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.