பட்டாம்பூச்சி.....
பட்டாம்பூச்சி.....

பட்டாம்பூச்சி  என்பது கண்ணைக் கவரும், மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பறக்கும் பூச்சி இனமாகும். பற்பல வண்ணங்களில் இறக்கைகள் கொண்டு, அழகாக இருப்பதனால், இவை வண்ணத்துப் பூச்சி எனவும் அழைக்கப்படுகின்றன. பட்டாம்பூச்சிகள் லெப்பிடோப்டரா என்னும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த அறிவியல் பெயரில் உள்ள லெப்பிசு  என்பது செதில் என்று பொருள்படும், தெரான்  என்பது இறக்கை (சிறகு) என்று பொருள்படும். எனவே பட்டாம்பூச்சிகள் செதிலிறகிகள் என்னும் இனத்தைச் சேர்ந்தவை
உண்மைப் பட்டாம்பூச்சிகள், தலைமைப் பட்டாம்பூச்சிகள் , அந்துப்பூச்சி பட்டாம்பூச்சிகள்,முதலிய பலவும் இக்குடும்பத்தைச் சார்ந்தவைகளாகும்.40-50 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய இடை இயோசீன் சகாப்தத்துடன் பட்டாம்பூச்சிப் படிமங்கள் தொடர்புடையனவாக நம்பப்படுகிறது.

முட்டையிலிருந்து, குடம்பிநிலையில் புழுவாக அல்லது மயிர்க்கொட்டியாக உருமாறி, பின்னர் கூட்டுப்புழு எனப்படும் உறங்கு நிலைக்குப் போய், பின்னர் அழகான பட்டாம்பூச்சியாய் உருமாற்றம் பெறுவது மிகவும் வியப்பூட்டுவதாகும். பட்டாம்பூச்சிகள் மலரிலிருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும் உணவு தேடுவதுமாகப் பறந்து திரிந்தாலும், இனப்பெருக்கம் செய்வது அவைகளின் இன்றியமையாத வாழ்க்கைக்கூறாகும். ஆண் பூச்சியோ பெண் பூச்சியோ இணைவு விருப்பத்தை தெரிவிக்கவும் அறியவும் சில குறிப்புகளைப் பயன்படுத்துகின்றன. இவை கண்ணால் காணக்கூடியதாகவோ மணமாக உணரக்கூடியதாகவோ இருக்கும். கண்ணால் காணக்கூடிய குறிப்புகள் தன் இறக்கைகளில் உள்ள செதில்களை அசைத்து புற ஊதாக்கதிர்களை பல்வேறு விதமாக எதிர்வுகொள்ளச் செய்கின்றன. இவ்வகைக் குறிப்புகள் மூலம் தான் ஆணா, பெண்ணா, எந்த இனத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சி என்பனவற்றைத் தெரிவிக்கின்றன. குறிப்புச் செய்திகள் சரியாக இருந்தால் அவ்வினத்தைச் சேர்ந்த எதிர்பால்  பூச்சி இணைய இசைவு தரும். இறக்கைகளின் செதிலில் மணம்பரப்பும் வேதியல் பொருட்களும் உண்டு. இம்மணம்பரப்பிகள் வெகுதொலைவு செல்லும் திறன் கொண்டவை. எனவே வெகு தொலைவில் உள்ள தன் இனப் பட்டாம்பூச்சியை ஈர்க்க வல்லது. பெரும்பாலான இனங்களில், ஆண் பூச்சியும் பெண் பூச்சியும் புணர்ந்த பின், ஆண் பூச்சி இறந்து விடுகின்றது. புணர்ந்த பின் சில மணிநேரத்திலேயே பெண்பூச்சியால் முட்டையிட இயலும். எனவே பெண் பட்டாம்பூச்சிகள் முட்டைகளையிட தகுந்த இடம் தேடிச்சென்று முட்டைகளை இடுகின்றன. 

ஒவ்வொரு பட்டாம்பூச்சியும் தன் வளர்ச்சியில் நான்கு நிலைகளைக் கடக்கின்றன.  முட்டைப் பருவம்,  புழுப் பருவம் (குடம்பிப் பருவம்) கூட்டுப்புழு பருவம்,  இறக்கைகளுடன் பறக்கவல்ல முழுப் பட்டாம்பூச்சி நிலை. முழுவளர்ச்சி அடைந்த பட்டாம் பூச்சி ஓரிரு வாரங்கள்தான் வாழுகின்றன. ஒரு சில பட்டாம்பூச்சி இனங்கள் ஒராண்டு, ஒன்றரை ஆண்டு வரையும் வாழுகின்றன. 

பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன. இவற்றில் மிகப்பெரியதான பட்டாம்பூச்சியானது பப்புவா நியூகினி நாட்டில் காணப்படும் குயின் அலெக்ஸாண்டிரா என்பதாகும். அது தன் இறக்கைகளை விரித்திருக்கும் பொழுது 28 செ.மீ. நீளம் இருக்கும்.  அமெரிக்காவில் காணப்படும் மேற்குக் குட்டிநீலம் எனப்படும் பட்டாம்பூச்சி இறக்கையை விரித்திருக்கும் பொழுது 1 செ.மீ. தான் இருக்கும். பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் காணப்படும் நிறங்கள் மிகப்பலவாகும். அதில் காணப்படும் நிறவடிவங்களும் கோலங்களும் அழகு வாய்ந்தவை.

பட்டாம்பூச்சிகள் உலகில் பெரும்பாலான இடங்களில் வாழ்கின்றன. மிகப்பலவும் வெப்ப மண்டலக் காடுகளில் வாழ்ந்தாலும், சில குளிர்மிகுந்த உயர் மலைப்பகுதிகளிலும் ,கனடாவின் வடமுனைக்கு அருகான பகுதியிலும், கடும் வெப்பம் நிறைந்த பாலைநிலங்களிலும் கூட வாழ்கின்றன. சில பட்டாம்பூச்சிகள் வியப்பூட்டும் விதமாக வெகுதொலைவு (3,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவு) வலசையாகப் பறந்து செல்கின்றன.  சிலவகைப் பட்டாம்பூச்சிகள் ஒருசெல் உயிரினங்கள், ஈக்கள், எறும்புகள், முதுகெலும்பற்றவை மற்றும் முதுகெலும்புள்ளவை போன்றவற்றுடன் ஒட்டுண்ணிகளாகவும் வாழ்கின்றன

பொதுவாகப் பறவைகள் எந்தப் பூச்சியைப் பார்த்தாலும் சாப்பிட்டுவிடும். ஆனால் பட்டாம்பூச்சிகளை பெரும்பாலும் பறவைகள் வேட்டையாடுவதில்லை. காரணம் அதிக வண்ணங்களோடு பளிச்சென்று இருக்கும் உயிரினங்கள் ஆபத்தானவை எனப் பறவைகளின் மூளையில் பதிவாகி இருக்கிறது. பட்டாம்பூச்சிகள் பெரும்பாலும் நச்சுச்செடிகளின் இலைகளில்தான் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். அந்த முட்டையிலிருந்து வெளிவரும் இளம் கம்பளிப்புழு, அந்த நச்சு இலைகளைத் தின்றே வளர்கிறது. இதனால், அதன் உடலிலேயே நச்சு கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்துவிடுகிறது. பட்டாம்பூச்சியாக உருவெடுத்த பிறகும் இந்த நச்சுத்தன்மை நீடிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது தெரியாமல் பறவைகள் பட்டாம்பூச்சியைக் கொத்தித் தின்றால் பறவைகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படுமாம். ஆனால் வயதான பிறகு பட்டாம்பூச்சியின் உடலில் விஷத்தன்மை குறைந்துவிடுமாம். அப்போது அதன் வண்ண நிறமும் மங்கிவிடும். இதைப் புரிந்து கொள்ளும் சில புத்திசாலிப் பறவைகள், பட்டாம்பூச்சியைக் கொத்தி தின்றுவிடுகின்றன.

244 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.