நிலவுபற்றி அறிந்த மற்றும் அறியாத பல விடயங்கள்...
நிலவுபற்றி அறிந்த மற்றும் அறியாத பல விடயங்கள்...

அனைத்துலக மக்களாளும் இரசிக்கப்படுகின்றதும் பாரபட்சமின்றி எல்லோர் மனங்களையும் கொள்ளையடிக்கும் ஒன்றாக இருப்பது நிலவு, நிலவு பற்றி அறிந்த மற்றும் அறியாத பல விடையங்கள்...

நிலா என்பது புவியின் ஒரேயொரு  இயற்கைத் துணைக்கோள் ஆகும். இது ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள ஐந்தாவது மிகப்பெரிய துணைக்கோளும் இரண்டாவது அடர்த்திமிகு துணைக்கோளும் ஆகும். நிலா ஏறத்தாழ 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவாகியுள்ளதாக கருதப்படுகின்றது. இதன் உருவாக்கத்தைப் பற்றி பலகருதுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன; தற்போது மிக விரிவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருதுகோளின்படி புவிக்கும் செவ்வாய் அளவிலான வான்பொருளுக்கும் இடையேயான பெரும் மோதலின் துகள்களிலிருந்து நிலா உருவானது.

நிலவு புவியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றி வர சராசரியாக 29.32 நாட்கள் ஆகிறது. புவிக்கும் நிலாவுக்கும் இடையே உள்ள சராசரித் தொலைவு 384,403 கி.மீ. ஆகும். ஈர்ப்பு விசை பூட்டல் காரணமாக நிலவு புவியை நோக்கி எப்போதும் ஒரு பக்கத்தையே காட்டுகின்றது; இந்தப் பக்கத்தில் வெளிச்சமான உயர்நிலங்களுக்கும் விண்கல் வீழ் பள்ளங்களுக்கும் இடையே பல எரிமலைசார் சமநிலங்கள் உள்ளன. புவியின் வான்பரப்பில் அன்றாடம் தோன்றும் வானியல் பொருட்களில்  இரண்டாவது வெளிச்சமான வான்பொருள் நிலவாகும். இது மிகவும் வெண்மையாகத் தெரிந்தாலும் இதன் தரைப்பகுதி உண்மையில் இருட்டாகவே உள்ளது.

புவியிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிவதாலும் முறைதவறா பிறை சுழற்சியாலும் தொன்மைக் காலத்திலிருந்தே மனித சமுகத்தின் பண்பாட்டுக் கூறுகளில், நிலவு மிகுந்த தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. நிலவின் ஈர்ப்புவிசைத் தாக்கத்தால் ஓதங்களும் நாள் நீள்வதும் ஏற்படுகின்றன..

நிலவின் கலை

கலைகள் என்பது நிலவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அளவாகத் தெரியும் தனித்தனி நிலைகளைக் குறிப்பன. இதனைப் பிறை என்று சொல்வது பெருவழக்கு. முதல் நாள் நிலாவே தென்படாது. இரவு மிக இருட்டாக இருக்கும். இதனை புதுநிலவு என்றும் அமாவாசை என்றும் அழைப்பர். பிறகு ஒவ்வொரு நாளும் சிறுகச் சிறுக நிலவின் வெளிச்சம் தெரியும் பகுதி பெரிதாகிக் கொண்டே வரும். இவைகளை இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை என்று சொல்வார்கள். பின்னர் சுமார் 14 நாட்கள் கழித்து ஒரு நாள் முழு நிலா பெரிதாய் வட்ட வடிமாய்த் தெரியும். இதனை முழுநிலவு என்றும் பௌர்ணமி என்றும் அழைப்பர். பிறகு அடுத்த சில நாட்கள் நிலா சிறுகச் சிறுகத் தேய்ந்து கொண்டே போய், மீண்டும் புதுநிலவு நாளுக்கான நிலைக்கே திரும்பி விடும். புதுநிலவு முதல் முழுநிலவு வரை வளர்ந்து வருவதால் வளர்பிறை என்றும், பிறகு அடுத்த புதுநிலவு நாள் வரை தேய்ந்து வருவதால் தேய்பிறை என்றும் அழைப்பர்.

புவியின் ஈர்ப்பைக் காட்டிலும் நிலவின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் புவியில் ஒரு பொருளின் விடுபடு வேகம் அதிகம்; மேலும் புவிப்பரப்பு வெப்பநிலையும் அதிகம் இல்லை. இவ்விரு காரணங்களால் காற்று மூலக்கூறுகள் புவியின் ஈர்ப்பை விட்டு விடுபட முடியாது. சுருங்கக்கூறின், பூமியின் ஈர்ப்பு விசை வளி மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது.ஆனால், நிலவின் ஈர்ப்பு குறைவாக இருப்பதால், அதிலுள்ள பொருள்களின் விடுபடு வேகமும் குறைவு; மேலும் நிலவின் பரப்பு வெப்பநிலை அதிகம் ஆதலால், அங்குள்ள மூலக்கூறுகள் விடுபட்டுச் சென்று விடும். எனவே தான் நிலவில் காற்று இல்லை. 

புவியல்லாது மனிதர்கள் கால் பதித்த ஒரே வான்பொருள் நிலவாகும். சோவியத் ஒன்றியத்தின் லூனா திட்டம் மனிதரில்லாத முதல் விண்கலத்தை 1959இல் நிலவில் இறக்கியது; இதுவரை மனிதர் சென்ற திட்டங்களை இயக்கிய ஒரே திட்டம் ஐக்கிய அமெரிக்காவின் நாசாவின் அப்பல்லோ திட்டம் ஆகும்; நிலவின் சுற்றுப்பாதையில் பயணித்த முதல் மனிதர்கள் 1968இல் அப்பல்லோ 8இல் சென்ற அமெரிக்க வானோடிகளாவர். 1969க்கும் 1972க்கும் இடையே ஆறு திட்டங்களில் நிலாவில் தரையிறக்கியுள்ளது. முதலில் நிலவில் தரையிறங்கிய மனிதர் அப்பல்லோ 11இல் சென்ற நீல் ஆம்ஸ்ட்றோங் ஆவார். இந்தத் திட்டங்கள் மூலம் 380 கிலோவிற்கும் கூடுதலான நிலவுப்பாறைகள் கொணரப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு நிலாவின் தோற்றம், உள்கட்டமைப்பு, நிலவியல் வரலாறு ஆகியன ஆய்வு செய்யப்படுகின்றன.

 புவியின் விட்டத்தைப் போல முப்பது மடங்கு தொலைவில் நிலவின் சுற்றுப்பாதை அமைந்திருப்பதால் வானத்தில் சூரியனின் அளவும் நிலவின் அளவும் ஒன்றே போலக் காட்சியளிக்கின்றன. இவ்வாறு அமைந்தது மிகவும் தற்செயலானதாகும். இதனால் முழுமையான சூரிய கிரகணத்தின் போது சூரியனை நிலவினால் முழுவதுமாக மறைக்க இயலுகின்றது

1970களில் அப்பலோ விண்பயணிகளால் கொண்டுவரப்பட்ட நிலவின் இரண்டு பாறையின் நீரினைக் கொண்டு சாலும், அவரது குழு உறுப்பினர்களும் ஆய்வு நடத்தினர் என கடந்த மே 9 சயன்ஸ் ஆய்விதழில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாறைகள் பெரும்பாலும் நிலவின் வாழ்நாளின் முன்பகுதியில் ஏற்பட்ட எரிமலை உமிழ்வின் போது புதைந்த கற்குழம்பு வேறு பரப்புக்கு தள்ளப்படுவதால் உண்டானதாக இருக்கும் எனவும், நீரினை வான்வெளியில் அகலாமல் தடுக்கும் படிகங்களுடன் பிணைந்த அடர் எரிமலைக்குழம்பின் சிறு குமிழிகளை அது கொண்டுள்ளது. எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

1972இல் அப்பல்லோ 17 திட்டத்திற்குப் பிறகு நிலவிற்கு ஆளில்லா விண்கலங்களே அனுப்பப்படுகின்றன. இவற்றில் நிலவுச் சுற்றுப்பாதைத் திட்டங்களே முதன்மையாக உள்ளன: 2004 முதல் ஜப்பான், சீன மக்கள் குடியரசு, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நிலவுச் சுற்றுப்பாதையில் விண்கலங்களை அனுப்பி உள்ளன. இவற்றின் மூலம் நிலவின் முனையங்களில் (துருவங்களில்) நிரந்தரமாக இருட்டாக உள்ளப் பள்ளங்களில் நிலவு நீர் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அப்பல்லோவிற்குப் பின்பு இரு தேட்ட ஊர்திகள் அனுப்பப்பட்டுள்ளன: 1973இல் சோவியத் ஒன்றியத்தின் இறுதி லூனோகோட் திட்டம்; திசம்பர் 14, 2013இல் ஜேட் ராபிட் அனுப்பிய சீனாவின் நடப்பிலுள்ள சாங் ஈ 3 திட்டம்.

நிலவில் நீரினை முதன்முதலில் இஸ்ரோவின் சந்திராயன்-1 செய்மதி நாசாவின் கருவியைப் பயன்படுத்தி கண்டறிந்தது.
இங்கிலாந்தின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவிவேதியியலாளர் ஆல்பர்டோ சால் என்பவர் சில ஆண்டுகளாக "நிலவு வறண்டதாக பிறந்தது" என்ற பொதுவான கூற்றை உடைக்க முயன்றபொழுது நிலவில் ஆழமான பகுதியில் உருவாகிய நீரானது புவியில் உண்டான நீரின் ஆதாரம் போன்றதாக இருக்கிறது என்பதை கண்டறிந்தார். 4.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒளிர்மைமாறு விண்மீன் மோதலினால் கோள் உருவான பொழுது நிலவு பூமியிடம் இருந்து ஒரு திடமான நீர் வழங்கலை கைப்பற்றியதாக அவரது ஆய்வு கூறுகிறது
அந்தக் குழு பாறைகளின் நீரை அதிலுள்ள ஐதரசன் மற்றும் ஒரு அதிக கருவணுவை  கொண்ட டியூட்டிரியம் ஆகியவற்றின் செறிவினை அளப்பதன் மூலம் பகுப்பாய்வு நடத்தியது. அதன் ஓரகத்தனிமங்களின் விகிதம் அந்நீரின் ஆதாரத்தை சூரியக் குடும்பத்திற்குள் உட்பட்டதுவாய் தெரிகிறது. சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உள்ள வாயுப் பெருங்கோள்கள் மற்றும் வால்வெள்ளிகள் மிக அதிக ஐதரசன்-டியூட்டிரிய விகிதத்தைக் கொண்டதாகும். பூமியின் நீரும் மிக குறைந்த விகிதத்தைக் கொண்டதாகும். பூமி மற்றும் பிற நுண்விண்கற்களின் குறைந்த ஐதரசன்-டியூட்டிரிய விகிதத்தைப் போன்றே நிலவுப் பாறைகளின் நீரும் குறைந்த விகிதத்தைக் கொண்டிருப்பது சால் மற்றும் அவரின் குழுவிற்கு ஆச்சரியத்தை அளித்தது. இதனால், பூமியின் நீரும் நிலவின் நீரும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரே மாதிரியான நுண்விண்கற்களின் தாக்கத்தினால் ஏற்பட்டது என கூறலாம் என சாலின் அறிக்கை கூறுகிறது

இப்படியாக இன்னமும்  ஆராய்சியாளர்களால் நிலவுமீதான ஆராய்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

154 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.