(புதியவன்)
அரசியல் தலையீட்டில் முறையான நடைமுறைகள் இன்றி மேற்கொள்ளப்பட்ட புகையிரத கடவைகளில் ஒளி சமிக்ஞைகள் பொருத்தும் திட்டம் தோல்வியடைந்ததால் இலங்கை சுமார் 97 கோடி ரூபா மக்கள் பணத்தை இழந்துள்ளதாகவும், 298 உயிர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த திட்டத்தின் மூலம் பொருத்தப்பட்ட ஒளி சமிக்ஞைகள் புகையிரத சேவை முன்னெடுக்கும் போது மாத்திரமின்றி ஏனைய நேரங்களிலும் இயங்குவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, நாடளாவிய ரீதியில் 533 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்பட்டதாகவும், அவற்றில் 200 கடவைகள் ஒளி சமிக்ஞைகளை பொருத்துவதற்கு வழங்கப்பட்டது.
பின்னர், இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டது.
இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 1501புகையிரத விபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில், 298 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1554 பேர் காயமடைந்துள்ளனர்.
பாதுகாப்பு கடவைகளில் விபத்துகள் அதிகரித்து வருவதற்கு ஒளி சமிக்ஞைகள் பொருத்தும் திட்டம் தோல்வியடைந்தமையே மிக முக்கிய காரணமாக கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
இதன்படி, ஒளி சமிக்ஞை அமைப்பொன்றை நிறுவுவதற்கு 4.48 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், ஒப்பந்தத்தின் படி 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதிக்குள் 200 பாதுகாப்பு சமிக்ஞை முறைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் உரிய நேரத்தில் முடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கான விலை மனு கோரலை மதிப்பிடுவதில் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை என்பதும், தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு போதிய உண்மையான தகவல்களை அமைச்சரவைக்கு வழங்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதன்படி, 2010 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை புகையிரத கடவைகளில் ஏற்பட்ட விபத்துக்களினால் புகையிரதங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை சரிசெய்வதற்காக 36,093,093 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
மேலும், 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை கொள்வனவு செய்யப்பட்ட 200 ஒளி, ஒலி சமிக்ஞை அமைப்புகளுக்கான மொத்த மதிப்பீட்டு தொகை செலுத்தப்படவில்லை எனவும், அதற்காக 968,544,039 ரூபா செலுத்தப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த குளறுபடிகள் காரணமாக மீண்டும் புகையிரத ஒளி, ஒலி சமிக்ஞைகளை சீர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக கோடிக்கணக்கில் பணத்தை செலவிட வேண்டியுள்ளதாகவும் புகையிரத பணிமனை சமிக்ஞை பிரிவு அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு புகையிரத பணிமனையிடமோ அல்லது அரசாங்கத்திடமோ எந்த வேலைத்திட்டமும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.