(புதியவன்) (ஏ)
கண்டி மெனிக்ஹின்ன மருத்துவமனை வளாகத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக மருத்துவமனை ஊழியர்கள் உட்பட 07 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (28) இரவு இந்த அமைதியற்ற நிலைமை ஏற்பட்டதையடுத்து அதனைக் கட்டுப்படுத்த சிறப்பு பொலிஸ் குழுவொன்று வரவழைக்கப்பட்டது.
மெனிக்ஹின்ன பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு விழாவின் போது காயமடைந்த நபரொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இதன்போது மருத்துவமனையின் பணிக்குழாமினரும் புத்தாண்டு விழாவில் பங்கேற்றிருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்க காலதாமதமாகியுள்ளது.
இது தொடர்பில் வினவிய போது, மருத்துவமனை ஊழியர்களுக்கும் காயமடைந்த தரப்பினருக்கும் இடையே காரசாரமான வார்த்தைப் பிரயோகம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் இது மோதலாக உருவெடுத்துள்ளதுடன், இரு தரப்பையும் சேர்ந்த 07 பேர் காயமடைந்து கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் ஐவர் மெனிக்ஹின்ன மருத்துவமனையின் ஊழியர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் மெனிக்ஹின்ன பொலிஸார் தலையிட்டு மோதலை சமரசம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இரு தரப்பினரையும் அழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
எவ்வாறாயினும், மருத்துவமனை வளாகத்தின் பாதுகாப்புக்காக பல பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தவும் மெனிக்ஹின்ன பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.