ஒவ்வொரு ஆண்டும் 4.8 மில்லியன் முதல் 12.7 மில்லியன் மெற்ரிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சங்கமிக்கின்றன என ஜார்ஜியா சர்வதேச பல்கலைக்கழக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது!
பிளாஸ்டிக் மாசுபாடு என்பது உலகளவில் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாக மாறி வருகின்றமை புதிய விடயமல்ல. இப்போது நாம் பெரிதளவில் பாதிக்கப்படவில்லையென்றாலும், எதிர்காலத்தில் இதற்கான விலையை நாமே கொடுக்கப் போகிறோம்.
பிளாஸ்டிக் மாசுபாட்டால் பெருங்கடலில் வாழும் உயிரினங்கள் பெரும் அச்சுறுத்தல்களை சந்திக்கின்றன. சுற்றுச்சூழல் அமைப்புகள் பல்வேறு வழிகளில் சீர்குலைகின்றன. மனிதர்களும் மறைமுகமாக பாதிக்கப்படுகின்றனர். அத்தோடு கடலை நம்பியிருக்கும் கடலோர சமூகங்களும் பாதிப்படைகின்றன.
இப்படி, பல வழிகளில் பிளாஸ்டிக் மாசுபாடு நம்மையும் இந்தச் சுற்றுச்சூழலையும் பெருமளவுக்கு பாதிக்கின்றது. எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து, முறையான கழிவு மேலாண்மையை மேம்படுத்தி, பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவது மூலமாகவே, இவ்வுலகில் நேர்மறையான தாக்கத்தை நாம் ஏற்படுத்த முடியும்.
இதைப் புரிந்துகொண்டு, நாம் ஒவ்வொருவரும் விலைமதிப்பற்ற சுற்றுச்சூழல் அமைப்புக்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
இலங்கையின் நிபுணர்கள் பிளாஸ்டிக் மாசுபாடு தொடர்பான பிரச்சனைக்குத் தீர்வு காண்பதிலும், மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குவதிலும், நாட்டின் சூழலுக்கு ஏற்ப தீர்வுகளை வழங்குவதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ருஹுணு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரும் கடல் உயிரியலாளருமான கலாநிதி டெர்னி பிரதீப்
குமாராவின் ஆய்வுகள் இலங்கையின் பிளாஸ்டிக் மாசுபாட்டின் தாக்கம் குறித்தும், கடல் பல்லுயிர் மற்றும் மீன்வளத்தில் அதன் விளைவுகள் குறித்தும் கவனம் செலுத்துகின்றது.
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையையும் இலங்கையின் கடல் சூழலுக்கு பிளாஸ்டிக் மாசுபாட்டால் ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தணிக்க உள்ளூர் தலையீடுகளின் அவசரத் தேவையையும் அவரது ஆராய்ச்சி அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
மேலும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் விஞ்ஞானியும் விரிவுரையாளருமான கலாநிதி அனுஷ் அமரசிங்க இலங்கையின் உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் நகர்ப்புறங்களில் பிளாஸ்டிக் மாசுபாடு குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
கலாநிதி அமரசிங்கவின் பணியானது, சமூகம் சார்ந்த முன்முயற்சிகள், பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கும், அடிமட்டத்தில் கழிவு மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்துவதற்குமான கொள்கைத் தலையீடுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
இந்த நெருக்கடியான சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் சூழல் சார்ந்த அணுகுமுறைகள் மற்றும் பல பங்குதாரர்களின் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பிளாஸ்டிக் மாசுபாடு பற்றிய உலகளாவிய உரையாடலுக்கு இந்த இலங்கை வல்லுநர்கள் மதிப்புமிக்க முன்னோக்குகள் மற்றும் சான்றுகள் அடிப்படையிலான ஆராய்ச்சிகளை வழங்குகிறார்கள்.
அத்துடன் பிளாஸ்டிக் மாசுபாடானது, பொருளாதாரம் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றில் நீண்டகால தாக்கங்களைக் கொண்ட உலகளாவிய நெருக்கடியாக மாறியுள்ளது.
ஜார்ஜியா சர்வதேச பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் பொறியியல் பேராசிரியரான கலாநிதி ஜென்னா மற்றும் ஜம்பெக் ஆகியோர் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்கள், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டிய அவசரத்தை வலியுறுத்துகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் 4.8 மில்லியன் முதல் 12.7 மில்லியன் மெற்ரிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேர்வதாக கலாநிதி ஜம்பெக்கின் ஆராய்ச்சி மதிப்பிட்டுள்ளது. இது பிரச்சனையின் அளவை எடுத்துக்காட்டுகிறது.
இத்துறையில் உள்ள மற்றொரு முக்கிய நபரான கலாநிதி மார்கஸ் எரிக்சன், கைர்ஸ் இன்ஸ்டிட்யூட்டின் இணை நிறுவனர் ஆவார், அவர் கடல்களில் பிளாஸ்டிக் மாசுபாடு குறித்து விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார்.
கலாநிதி எரிக்சனின் பணி, உலகளாவிய கடல் சூழல்களில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இது பிளாஸ்டிக் மாசுபாட்டின் பரவலான தன்மை மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்களில் அதன் தாக்கத்தை நிரூபிக்கின்றது.
பிளாஸ்டிக் நுகர்வைக் குறைப்பதற்கும், கழிவு மேலாண்மை அமைப்புகளை மேம்படுத்துவதற்கும், வட்டப் பொருளாதாரத் தீர்வுகளை மேம்படுத்துவதற்கும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தை இந்த நிபுணர்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனர்.
விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் அறியப்பட்ட ஆதார அடிப்படையிலான உத்திகள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம், பிளாஸ்டிக் மாசுபாட்டின் பேரழிவு விளைவுகளை நாம் குறைக்கலாம். அத்தோடு நமது கிரகத்தின் நிலையான எதிர்காலத்தை நோக்கி வேலை செய்யலாம்.
அத்துடன் பிளாஸ்டிக் மாசு பிரச்சனை உலகளவில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்து வருகிறது. தொடர்ச்சியான ஆராய்ச்சிகள், கொள்கை மேம்பாடுகள் மற்றும் இந்த அழுத்தமான சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில் இதுவரை சில பொதுவான போக்குகளை சமீபத்திய முன்னேற்றங்களாக பின்வருவன தாங்கி வருகின்றன.
பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராட பல நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் தூய்மையான கடல் பிரச்சாரம், கடல் குப்பைகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் வழிமுறைகள், சில செலவழிப்பு பிளாஸ்டிக் பொருட்களைக் குறிவைக்கும் முயற்சிகள் இதில் அடங்கும்.
சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்தில் பிளாஸ்டிக் மாசுபாட்டின் தாக்கங்களை விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
சமீபத்திய ஆய்வுகள் கடல் உயிரினங்களில் மைக்ரோபிளாஸ்டிக் குவிப்பு, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை உத்திகளின் செயல்திறன் மற்றும் வழக்கமான பிளாஸ்டிக்குகளுக்கு மக்கும் மாற்றீடுகளின் வளர்ச்சி போன்ற தலைப்புகளில் கவனம் செலுத்துகின்றன.
பல நிறுவனங்கள் தங்கள் பிளாஸ்டிக் தடத்தைக் குறைத்து, நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றன.
பேக்கேஜிங்கை மறுவடிவமைப்பு செய்வதற்கான முயற்சிகள், தயாரிப்புகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் மறுசுழற்சி மற்றும் வட்ட பொருளாதார முயற்சிகளில் முதலீடு செய்வது ஆகியவை இதில் அடங்கும்.
பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், உள்ளூர் தீர்வுகளைப் பரிந்துரைப்பதிலும் அடிமட்ட இயக்கங்கள் மற்றும் சமூகம் சார்ந்த அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த முயற்சிகளில் பெரும்பாலும் கடற்கரையை சுத்தம் செய்தல், பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டங்கள், கல்விப் பிரச்சாரங்கள் மற்றும் உள்ளூர் மட்டத்தில் கொள்கை வாதிடுதல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
புதுமையாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்கொள்ள புதிய தொழில்நுட்பங்களையும் தீர்வுகளையும் உருவாக்கி வருகின்றனர்.
பிளாஸ்டிக் மறுசுழற்சி, கழிவு-ஆற்றல் தொழில்நுட்பங்கள், மக்கும் பிளாஸ்டிக் மற்றும் கடல் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களில் முன்னேற்றங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
உலகெங்கும் உள்ள அரசாங்கங்கள் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைக்க சட்டங்கள் மற்றும் கொள்கைகளை இயற்றுகின்றன. இதில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் மீதான தடைகள் அல்லது கட்டுப்பாடுகள், நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு திட்டங்களை செயல்படுத்தல் மற்றும் கழிவு மேலாண்மை உட்கட்டமைப்பில் முதலீடு செய்தல் ஆகியவை அடங்கும்.
பிளாஸ்டிக் மாசுபாடு உருவாக்கியுள்ள உலகளாவிய அவசரநிலை நெருக்கடியானது வலுவானதோர் உடன்படிக்கையை கொண்டுவரவேண்டிய தேவையை ஐ.நாவுக்கு ஏற்படுத்தியுள்ளதாக சமீபத்தில் வெளியாகியுள்ள ஓர் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் 2022 ஆம் ஆண்டிலிருந்து பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தி தீர்வொன்றை முன்மொழிய உலகளாவிய ஒப்பந்தம் கொண்டுவரப்பட வேண்டும் என சுற்றுச்சூழல் புலனாய்வு நிறுவனம் உட்பட பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
(இராஜேஸ்வரி)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.