அழியாத அழகான தமிழ் மொழியில்
பலர் அறியாத உண்மைக் கதைகள்
என் விழி நீர் கொண்டு கிறுக்கி வைத்திருக்கின்றேன்.
உறக்கமில்லா என் இதயத்தில்_ நான் நந்திக் கடல் நிலவு
எம் தமிழ் அடையாளம் தெரியாமல்
அழிக்க நினைத்தவர்களை
எப்படி என்னால் மறக்க முடியும்
முழுநிலவாய் உலா வரும் என்னை
யார் தான் தடுத்து விடுவார்
பௌர்ணமியாய் இருந்தபோது
பல உண்மைகளை பார்த்தவன் நானல்லவா
அமாவாசையாய் இருந்த போது
பல அழு குரல்கள் கேட்டவனும் நான் அல்லவா
நான் நந்திக் கடல் நிலவு
பல பிஞ்சு உயிர்கள் கெஞ்சியதையும்
வஞ்சமில்லா பல உயிர்கள்
தீயினில் வெந்து கருகியதையும்
யார் தான் மறப்பார்கள்
உயிரற்ற கொங்கையில்_பால்குடித்த பாலகனை
பதை பதைக்க கொன்ற கதை நீ அறிவாயா?
தாயின் கருவறையில் இருந்த குழந்தையின்
உயிர் துடிப்பை மட்டும் அறிந்த
எத்தனை தாய்மாரின் உயிரை குடித்தார்கள்
தெரியுமா உனக்கு?
கண்ணியமான குடும்பங்கள்
வாளாவெட்டியாய் இன்று எத்தனை
மங்கையர்கள் படும் பாடு உனக்குத் தெரியுமா ?
தாயில்லாத குழந்தைகள் குழந்தைகளை இழந்த தாய்மார்கள்
கணவனை, மனைவியை, சகோதரரை தொலைத்த மானிடர்கள் எத்தனை எத்தனை
அத்தனையும் நந்திக் கடலோர அலைகளின் ஓசைகளில் கேட்டுப்பாருங்கள்
இயற்கை ஆணவனின் கடைசிநேர கதரொலிகளை
யாராலும் எழுதிடவும் பேசிடவும் முடியாது
உயிர்களை அழிக்க நினைப்பவர்கள் என்றும் வாழ்ந்ததில்லை
வாழ வைக்க நினைப்பவர்கள் என்றும் வீழ்ந்ததில்லை
பஞ்சபூதங்களால் காலத்துக்கு ஏற்றவாறு உணர்த்தப்படும்
நீ கலங்காது இரு மகளே.
நான் நந்திக் கடல் நிலவு
பல வடுக்களை சுமந்தவர்களும்
பல வலிகளை சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்
நடைபிணமாக
கந்தகத்தின் பாதி உயிரைக் கொடுத்தவர்கள்
இன்று ஊமைகளாக்கப்பட்டு இருக்கின்றார்கள்
கந்தகவாசம் உணராதவர்களும்
உயிர் பிரியும் வலியை உணராதவர்களும்
ஏதேதோ எல்லாம் பேசுகின்றார்கள்_நான் அறிவேன்.
அறிந்தும் மௌனத்தில் நான் நந்திக் கடல் நிலவு.
நந்தி கடல் அலையில் அன்று
எங்கள் பாதம் தொட்டு வரும்போது
எம் கதைகள் எல்லாம் பக்குவமாய் உலகெங்கும்
கொண்டு சேர்த்திருக்கும் நந்தி கடல்.
இன்று கூட நந்திக் கடல் அலை ஓசையினை
காது கொடுத்து கேட்டுப்பாருங்கள்
உங்கள் கண்ணில் ரத்தம் வரும்.
நந்திக் கடலில் பதிந்த ஒவ்வொரு பாதங்களுக்கும்
தலை சாய்த்து வணங்குகின்றேன்
நான் நந்திக் கடல் நிலவு
வளலாய் ஊர்
வீ.எஸ்
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.