போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட தாகக் கூறப்படும் முருங்கன் மருத்துவமனை அம்புலன்ஸ் சாரதி உடனடியாக பதவி நீக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் அம்புலன்ஸ் வண்டிக்குள் வைத்து 179 கிராம் ஐஸ் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவரைப் பொலிஸார் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்தே கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது அம்புலன்ஸின் சாரதி தப்பியோடியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர் வவுனியா மருத்துவமனையில் பணிபுரிபவர் எனவும் தப்பியோடிய சாரதி முருங்கன் ஆதார மருத்துவமனையில் பணியாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே போதைப்பொருள் பிரச்சனைகளுடன் தொடர்பு பட்ட அம்புலன்ஸ் வாகன சாரதி உடனடியாக பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளார் எனவும் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எந்த தரத்தில் இருந்தாலும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.