பூமியின் தொடக்க காலத்தில் பிரமாண்ட டைனோசர் உயிரினங்கள் வாழ்ந்து வந்ததை அறிவியல் தகவல்கள் உறுதி செய்துள்ளன. இந்த டைனோசரில் ஏராளமான வகைகளும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். இதனை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் ரசிகர்கள், குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் சுவாரசியம் மிக்கதாக அமைந்தன. இன்றும் டைனோசர் குறித்த ஆய்வுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. வானிலை மாற்றங்கள் காரணமாக டைனோசர் இனங்கள் அழிந்ததாக நம்பப்படுகிறது. அவற்றின் படிமங்கள் பல்வேறு பகுதியில் கண்டெடுக்கப்பட்டு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
தற்போது டைனோசர் இனத்தின் புதிய வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படிமம் 7 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த விசித்திரமான டைனோசர் தெற்கு மங்கோலியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது முற்றிலும் புதிய வகை டைனோசர் ஆகும் என்றும் இவை ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த டைனோசர்கள் பறவைகள் தூங்கும் அதே பாணியில் உறங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த டைனோசரின் எலும்புக்கூடு முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறிய குகை போன்ற இடத்தில் உறங்கிய நிலையிலேயே அது உயிரிழந்துள்ளது. இந்த எலும்புக்கூடு மூன்றடி உயரம் கொண்டது. அதன் தலை பின்னோக்கி வளைந்திருந்தது. மேலும் அதன் கைகளையும் கால்களையும் உள்நோக்கி மடக்கி வைத்திருந்தது. ஒரு பறவை அதன் கூட்டில் தூங்குவது போல் தோன்றியது. இந்த படிமத்தை மையப்படுத்தி மேலும் சில ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.