(புதியவன்)
நகர்ப்புர பகுதிகளில் முழுமையான நீர் ஆதார பாதுகாப்பினை உறுதி செய்வது, அனைத்து வீடுகளுக்கும் வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது. கழிவு நீர், கசடு மேலாண்மை மற்றும் பயன்படுத்தப்பட்ட நீரின் மறுசுழற்சி / மறுபயன்பாடு, கழிவு நீர் நிலைகளை புனரமைப்பது மற்றும் பசுமை வெளிகள், பூங்காக்கள் உருவாக்குவது உள்ளிட்ட நோக்கங்களைக் கொண்டு ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் நகர்ப்புர உள்ளூராட்சி அமைப்புகளின் நிதி பங்களிப்புகளுடன், அடல் நகர்ப்புர புத்துணர்வு மற்றும் நகர்ப்புர மாற்றத்திற்கான திட்டம் 2.0 (அம்ரூத் 2.0) செயல்படுத்தப்பட்டுவருகிறது.
நகரங்களை சீரமைக்கவும், அவற்றை மேம்படுத்தி பொலிவு பெறும் வகையில், மாற்றி அமைக்கவும் வழிவகுக்கும் அம்ருத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடியிருப்பிற்கும் குழாய் இணைப்பு ஏற்படுத்துவது உறுதி செய்யப்படும். குழாய் வழி குடிநீர் விநியோகத்திற்கும் வடிகால் வசதிக்கும் வழி வகுக்கும் இந்த இயக்கம், நகரங்களில் வசதிகளை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றது.
நகரங்களின் பசுமைப் பகுதியை அதிகரிக்கவும், பூங்காக்கள் போன்ற திறந்த வெளிகளைப் பராமரிக்கவும், மாசு படுதலைக் குறைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இத்திட்டம் இடமளிக்கின்றது. பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்துதல், நடைப் பயணம், ஈருருளி சவாரி போன்றவற்றிற்கான வசதிகளை விரிவுபடுத்துதல் போன்ற பணிகளும் இத்திட்டத்தில் அடங்கும்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட நகரங்கள், அவற்றின் குடிநீர் தேவையில் தன்னிறைவை பெறவும், கழிவு நீரை பாதுகாப்பான முறையில் சுத்திகரிக்கவும், நீர்நிலைகளை மேம்படுத்தவும் அதன் மூலம் குடிநீர் ஆதாரங்களை உறுதிப்படுத்தவும் ஏதுவாக அமையும். மேலும், பசுமை வெளிகள் மற்றும் பூங்காக்கள். இந் நகர மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும் வழிவகுக்கும் என்று தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் பசுமை வெளிகள் மற்றும் பூங்காக்களை உருவாக்குதல், கோவில், சர்ச், மசூதி, தர்கா போன்ற சமய இடங்களிலுள்ள மற்றும் தனியாருக்கு சொந்தமான நீர்நிலைகள் ஆகியவற்றையும் உள்ளடக்கி குளங்கள், ஓடைகள், வாய்க்கால்கள் மற்றும் குட்டைகள் ஆகிய நீர்நிலைகளை புனரமைக்கும் / மேம்படுத்தும் பணிகள், நீர்நிலைகளைச் சுற்றி நடைபாதை, வேலி, இருக்கைகள், குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படுதல், மழை காலத்தில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் மழைநீர், நீர்நிலைகளுக்கு சென்று சேரும் வகையில் வழிகள் ஏற்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்துதல், புதிய குடிநீர் குழாய் மற்றும் கழிவுநீர் குழாய் இணைப்புகளை வழங்குதல், தண்ணீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிக்கும் திறன் கொண்ட நிலையங்களை அமைத்தல் போன்ற பணிகளை செயல்படுத்த / பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பரங்கிப்பேட்டை பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோறிக்கை விடுக்கின்றனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.