(பட்சி)
நேற்றைக்கு வீட்டுக்கட்சியின்ற மத்தியகுமுக்காரர். ஆலோசனைக் கூட்டமெண்ட பேரில கிளிநொச்சியில கூடியிருக்கினம். முதலில மத்திய குழுக்கூட்டம் எண்டுதான் அழைப்பு விட்டவை. பிறகு அது நீதிமன்றத்தில் வழக்கு நடக்கேக்க ஏதும் சிக்கலைக் கொண்டந்திடுமோ எண்டிட்டு, ஆலோசனைக் கூட்டம் எண்டு பேரை மாத்தினவை. பேசாமல் மத்தியகுழுக்கூட்டம் எண்டதுக்குப் பதிலா மத்தியானச் சாப்பாட்டுக்குழுக் கூட்டம் எண்டு பேரை வைச்சிருக்கலாம். ஏனெண்டால் மத்தியானச் சாப்பாட்டோட எல்லாரும் கூட்டத்தை முடிச்சுப்போட்டுப் போட்டினம்.
எதுக்கு உந்தக் கூட்டமெண்டு உங்களுக்கு விளங்கியிருக்கும். திருகோணமலையிலையும். யாழ்ப் பாணத்திலையும் வழக்குகள் போடப்பட்டு இருக்கெல்லோ. அதுகளை எப்பிடி எதிர்கொள்ளுறது எண்டதுக்குத்தான். கனநேரம் இழுபறிப்பட்டுத்தான் கடைசியா, 'நிபந்தனை விதிக்காமல் வழக்கை வாபஸ் வாங்கோணும், இல்லாட்டி அதைக் கோர்ட்டில சந்திப்பம்' எண்டு முடிவெடுத்தவை. வழக்குகளைப் போட வைச்ச தரப்பில ஒரு சிலரும் இந்தக் கூட்டத்தில கலந்துகொண்டதால கூச்சல் குழப்பத்துக்கும் குறைவிருக்கேலை.
கூட்டத்துக்கு அம்புலன்ஸில வந்து பெரும் அலப்பறை குடுத்தவர் டாக்குத்தர் சிவமோகன். வவுனியா வில பிரவேட் ஆஸ்பத்திரியில உழைச்ச காசு பத்தாது எண்டு கிளிநொச்சியில ஏதும் இடம் பார்க்க வந்தாரோ தெரியேலை. இல்லாட்டி மகாத்மா காந்தி எண்ட பேரில குவாசியக்கோர் வருத்தம் வந்தமாதிரி உருவத்தில சிலை வைச்ச மாதிரி இஞ்சயும் ஏதும் சிலைவைக்க வந்தாரோ தெரியேலை. கட்சிக் கூட்டத்துக்கு இலங்கையிலேயே அம்புலன்ஸில வந்த முதல் அரசியல்வாதி சிலைமோகனாத்தான் இருக்கும். வந்தவர் சும்மா இருக்கேலை. தான் எந்தத் தரப்பு எண்டதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாத்துக்கும் குறுக்க விதண்டாவாதம் கதைக்கிறதும், வழக்குப் போட்ட ஆக்களுக்கு வக்காலத்து வாங்கிறதுமா இருந்தார். ஒருகட்டத்தில வழக்காடுறது ஆரெண்டு அறிவிச்சவை. உடன எங்கட டாக்குத்தருக்கு கோபம் வந்திட்டது. 'அதென்னெண்டு இவைதான் வழக்குப் பேசோணும் எண்டு எங்களைக் கேக்காமல் முடிவெடுப்பியள்? எண்டு பாயத் தொடங்கிட்டார். ஒருவேளை அப்பிடி ஆரெல்லாம் வழக்குப் பேச வரப்போயினம் எண்டு அம்புலன்ஸில வந்த டாக்குத்தரிட்ட கேட்டிருந்த அடுத்த நிமிசமே, சொல்லவேண்டிய ஆக்களிட்ட சொல்லி, அந்த லோயர்மாரையும் வழக்காட விடாமல் ஏதும் அலுவல் பாத்திருப்பினம்.
கூட்டத்துக்கு வந்த இன்னொரு முக்கியமான ஆள் பீற்றர் இளஞ்செழியன் தான். ஏனெண்டால் வழக்குப் போட்டதில இவரும் ஒராள். இவரை வழக்குப் போட வைச்சவை கூட்டத்துக்கு வராமல் ஒளிச்சுப் பிடிச்சு விளையாடினாலும், பீற்றர் இளஞ்செழியன் வந்ததைப் பாராட்டத்தான் வேலு வேணும். எண்டாலும் கூட்டம் நடந்தது. கிளிநொச்சியில இருக்கிற சிறீதரன்ர ஒப்பீஸில .'வழக்குப் போட்ட கோபத்தில சாப்பாட்டுக்க நஞ்சைக் கிஞ்சைப் போடேலத்தானே?' எண்டு கேட்டிட்டு பயத்திலை ஆள் சாப்பிடாம மாறிட்டாம். நேற்றையான் கூட்டத்தோட வழக்குப்போட்ட தரப்பில இருந்த கொஞ்சப்பேர், மற்றப்பக்கம் சாய்ஞ்சிட்டினமாம். அவை உள் வீட்டுத் தகவல் ஒண்டையும் ஆதாரத்தோட கட்சிக் காரரிட்ட சொல்லியிருக்கினமாம்.
யாழ்ப்பாணத்தில வழக்குப் போடுறதுக்காக பொதுச் சபையிலவேற ஆளைத்தான் முதல்யோசிச்சவையாம். அந்த ஆள்வீட்ட ஒரு கும்பலா போய் வழக்குப்போட ஆலோசனையும் செய்தவையாம். அவையின்ர லிஸ்ட்டும் கட்சி மேலிடத்துக்கு குடுபட்டிருக்காம். நேரம் வரேக்க அவையைக் கவனிப்பம் எண்டு கட்சிக்காரர் முடிவெடுத் திருக்கினமாம்.
(24.02.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.