ஆதவன்.
மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் பணியாளர்களின் சம்பள அதிகரிப்புத் தொடர்பிலான விளக்கம் கோருவதற்காக மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதிகாரிகள் சிலரை எதிர்வரும் 5ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு கட்சித்தலைவர்கள் கூட்டத்துக்கு அழைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக்கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நேற்றுக்கூடியது. இதன்போதே மத்திய வங்கியின் அதிகாரத் தரப்பினரை கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டது. மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் பணியாளர்களின் சம்பளம் 70 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு ஆளும் மற்றும் எதிர்தரப்பின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, மத்திய வங்கியின் ஆளுநரை நாடாளுமன்றத்துக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
புதிய மத்திய வங்கிச் சட்டத்துக்கு அமைய மத்தியவங்கி சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளதால் சம்பள விவகாரத்தில் தலையிட முடியாது என நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இலங்கை மத்திய வங்கியின் நிர்வாக சபையின் அங்கீகாரத்துடனும் தொழிற்சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட் டின் அடிப்படையிலேயே தமது ஊழியர் களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்க மத்திய வங்கி தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.