கடலில் இறங்கி போராட்டம் நடத்த முடிவு!
மாதவன்.
இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து எதிர்வரும் 26 ஆம் திகதி கடலில் இறங்கி திருவோடு ஏந்தி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்த மீனவர்கள் நடத்திய அவசர கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற இரண்டு படகுகளையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் எல்லை மீன் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.
இதனையடுத்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
கூட்டத்தில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும், இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து எதிர்வரும் 26ஆம் திகதி ராமேஸ்வரம் மீனபிடி; அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து மீனவர்கள் பேரணியாக வந்து கடலில் இறங்கி திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றி முடிவு செய்துள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் அறிவிக்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை படகுடன் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் கைது நடவடிக்கை நடைபெறாமல் இருநாட்டு அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.