மாதவன்
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்துக்கு சர்வதேச தொண்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட மிகவும் பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் குறித்து கணக்கு பதிவேட்டில் பதியப்படாமை தொடர்பில் அந்த வலயத்தின் கணக்காளர், மாகாண கல்விப் பணிமனைக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குறித்த நன்கொடை பொருட்களை இருப்புப் புத்தகத்தில் பதிவு செய்வதற்காக களஞ்சியத்தில் ஒப்படைக்குமாறு நிதி உதவியாளர், களஞ்சியக் காப்பாளர் மற்றும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகரிடம் பணித்திருந்தார்.
அதற்கமைய NP/45/02/SK/10/001 இலக்க 04.07.2004 திகதிய கடிதம் மூலம், தகவல் தொழில்நுட்ப ஆசிரிய ஆலோசகர் குமரனை குறித்த பொருட்களை களஞ்சியத்தில் ஒப்படைக்குமாறு கேட்டிருந்தேன்.
தற்போது எமது அலுவலகத்தின் வருடாந்த இருப்புக் கணக்கெடுப்பின் கள ஆய்வின் போது குறித்த பொருட்கள் எவையும் அலுவலகத்தில் காணப்படவில்லை.
இது தொடர்பாக சேவைக்கால ஆசிரிய ஆலோசகரான திருக்குமரனிடம் கேட்டபோது, அவை தொடர்பாக தான் அறிந்திருக்கவில்லை எனவும் இது குறித்து எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த தொண்டு (Save the Children) நிறுவன இணைப்பாளர் சுரேஸ்குமார் என்பவரிடம் வினவிய போது: வலயக் கல்விப் பணிப்பாளரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி தன்னிடம் சில பொருட்களை ஒப்படைத்துள்ளார் எனக் கூறினார்.
இது தொடர்பான தங்களின் ஆலோசனைகளையும், அறிவுறுத்தலையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்து எழுத்து மூலமாக கடிதத்தை மாகாண கல்விப் பணிமனைக்கு அனுப்பியுள்ளார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தொண்டு (Save the Children) நிறுவனப் பிரதிநிதியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது: குறித்த கல்வி வலயத்துக்கு தம்மால் பொருட்கள் வழங்கப்பட்டமை உண்மை எனவும் அது ஏன் வரவுப் புத்தகத்தில் பதியப்படவில்லை என்பது தொடர்பில் வலயக் கல்விப் பணிமனை தான் கூற வேண்டும்.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் குறித்த பொருட்கள் மீண்டும் எம்மிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் எமது தலைமைக் காரியாலயத்துடன் கலந்துரையாடி வேறு பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.