முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவன் தெரிவிப்பு..!
(மாதவன்)
டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடி மற்றும் சண்டித்தன அரசியல் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகாது என முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் கடந்த 05 ஆம் திகதி மக்களின் நியாயமான போராட்டத்தை முறியடிக்க 06 பேரூந்துகளில் மக்கள் அழைத்து வரப்பட்டனர்.
குறித்த விடயம் தொடர்பாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது,
முதலில் நாம் 06 பேரூந்துகளில் வந்திருந்த மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் அவர்கள் தமிழ் மக்கள் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு காசு ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபா தருவதாகவும் அட்டை பண்ணைக்கான அனுமதிபத்திரம் தருவதாகவும் பல பொய்களை கூறி பொன்னாவெளி கிராம மக்களின் போராட்டத்தை முறியடிக்கும் நோக்கிலேயே அழைத்து வரப்பட்டனர்.
இருப்பினும் 06 பேரூந்துகளில் வந்திருந்த வேறு பிரதேச மக்கள் பொன்னாவெளி கிராமத்தில் இடம்பெறும் போராட்டத்தின் உண்மை நிலையை அறிந்து போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதற்கு அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அதேபோல் ஜெயபுரம் மற்றும் முழங்காவில் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொன்னாவெளி மக்களுக்காக தமது நேர்மையான செயற்பாட்டை செய்திருந்தனர். அவர்களுக்கும் எமது நன்றிகள்.
அரச தலைவரால் நியமிக்கப்பட்ட ஒரு அமைச்சரின் அடாவடித்தனமான செயலாக இச் செயல் அமைந்துள்ளது. மீண்டும் பல சிறப்புப் பாதுகாப்புக்களுடன் பொன்னாவெளி கிராமத்துக்கு செல்ல உள்ளதாகவும் மக்களின் உரிமை போராட்டத்தை அடக்குமுறை மூலம் நடத்திச்செல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவரது இவ்வாறான செயல் இலங்கையின் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே பாதிக்கும். வடக்கில் கடல் தொழில் அமைச்சரால் வாக்கு எண்ணிக்கை வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் இவ்வாறான செயற்பாடுகளை பார்க்கும் போது இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலா என்றும் எண்ணத் தோன்றுகிறது எனவும் கருத்து வெளியிட்டிருந்தார்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.