(புதியவன்)
தாய்க்கு தெரியாமல் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 9 வயது சிறுவன் ஒருவன் மொறட்டுவை - முரவத்தை தொடரூந்து கடவைக்கு அருகில் தொடரூந்தில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர், மொறட்டுவை - மொறட்டுவெல்ல - க்ளோவியஸ் மாவத்தையில் வசித்து வந்த மொறட்டுவை ஜனஜய பாடசாலையில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் எம். ஆர்.ரந்தரு என்ற மாணவர் ஆவார்.
தொடரூந்தை இயக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தொடரூந்தின் பாதுகாப்பு கடவையும் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் உயிரிழந்த சிறுவன், புதிய காலி வீதியில் இருந்து தனது துவிச்சக்கரவண்டியில் பயணித்த போது தொடரூந்து பாதுகாப்பு கடவை அருகில் துவிச்சக்கரவண்டியை அவர் நிறுத்தியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது, கொழும்பில் இருந்து காலி நோக்கி ரயில் பயணித்து கொண்டிருந்ததாகவும், பாதுகாப்பு கடவையை திறக்கப்படுவதற்கு முன்னர், குறித்த சிறுவன் தனது துவிச்சக்கரவண்டியை தண்டவாளத்தின் ஊடாக செலுத்தியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அப்போது, பெலியத்தவில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடரூந்து மற்றைய தொடரூந்து மார்க்கத்தின் ஊடாக பயணித்த போது, சிறுவனின் துவிச்சக்கர வண்டி அதில் மோதியுள்ளது.
இந்த விபத்தில், சிறுவன் சுமார் 13 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டதாகவும் பின்னர் சம்பவம் இடம்பெற்ற, அருகில் தொடரூந்து நிறுத்தப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
விபத்தில் சிறுவனின் கால் துண்டிக்கப்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனின் உடல்கூற்றுப் பரிசோதனை பாணந்துறை ஆதார மருத்துவமனையில், மொறட்டுவை இறப்பு விசாரணை அதிகாரி கவிந்து பெரேஸ் தலைமையில் நடைபெற்றது.
மொறட்டுவை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.