(பட்சி)
அநேகமா எல்லாரும் பேய்ப்படங்கள் பார்த்திருப்பியள். ஏதும் ஒரு இடத்தில பேய் வந்திட்டுதெண்டால், அதை இன்னும் பதற்றமாக்கிறதுக்கு சில அறிகுறியளை படங்களில காட்டுவினம். கதவு பட படவெண்டு அடிக்கும். எங்கையாவது ஒரு பூனை வித்தியாசமாக் கத்தும், மேசையில இருக்கிற பாத்திரங்கள் கீழ திடீரெண்டு விழும், சும்மா இருந்த சாய்மனைக் கதிரை 'கிறீச், கிறீச்' எண்டு ஆடும். அதுவரைக்கும் எரிஞ்சு கொண்டிருந்த மெழுகுதிரி டப்பெண்டு நூர்ந்து போகும், கேர்ட்டின் சீலை எல்லாம் பிரபுதேவா மாதிரி கண்டபடி காத்துக்கு ஆடும். கண்ணைப் பறிக்கிற மாதிரி எரிஞ்ச பல்ப் 'கிர்க்.. கிர்க்' எண்டு ஒருமாதிரியா சத்தத்தோட விட்டு விட்டு எரியும். இப்பிடியெல்லாம் விளையாட்டுக் காட்டின பிறகுதான் பேய் வெளியில வரும். பேயைப் பாக்க முதலே இப்பிடியான வெருட்டுகளால் படத்தைப் பாக்கிறவை கெலிச்சுப் போடுவினம். பேயைவிடவும் இந்தப் பின்னணி பில்டப்புகள் தான் ரென்சனைக் கூட்டும். படங்களில வாற இந்தக் காட்சியள் உண்மையாவே பேய் வாறதுக்கு அறிகுறி எண்டால், யாழ்ப்பாணத்திலயும் சில இடங்களில் பேய் நடமாடுது எண்டு தான் பட்சி நினைக்குது.
அப்பிடியான இடங்களில ஒண்டு யாழ்ப்பாணம் ரெயில்வே ஸ்ரேசனில இருந்து ஆஸ்பத்திரி றோட்டில வந்து ஏறுற குறுக்கு றோட் இதை றோட் எண்டுறதை விட குச்சொழுங்கை எண்டுதான் சொல்லலாம். ரயில் தண்டவாளத்தோட ஒட்டி உரசிக்கொண்டு வந்து அப்பிடியே மெயின் றோட்டில இந்தப்பாதை முடியும். சிக்னல்ல நிண்டு மினக் கெடாமல் ரெயில்வே ஸ்ரேசனுக்கோ,அதுக்குப் பக்கத்தில இருக்கிற ஹொட்டல்களுக்கோ போறதுக்கு கனபேருக்கு இதுதான் சுகமான பாதை. இந்தப் பாதையால இரவு 9 மணிக்குப் பிறகு போய் வாறவைக்கு கட்டாயம் ஹார்ட் அற்றாக் வராமல் விடாது. ,இந்தக் குறுக்கு றோட்டில வெளிச்சத்துக்காக ஒரு பத்துப் பதினைஞ்சு 'லைட்' பூட்டியிருக்கு. எல்லா லைற்றும் சொல்லி வைச்ச மாதிரி 9 மணிக்குப் பிறகு பேய் வரேக்க மின்னி மின்னி எரியிற மாதிரி விட்டு விட்டுத் தான் எரியும். அதோட 'கிர்' எண்ட சத்தம் வேறு. உந்த லைற்றுகள் ஒவ்வொரு நாளும் இப்பிடித்தான் எரியுது எண்டது தெரியாமல் தனிய ஆரும் போனால், பிச்சை வேண்டாம் நாயைப் பிடி எண்டு ஓடாமல் இருக்காயினம். அந்தளவுக்கு லைற்றுகள் பயப்பிடுத்துற மாதிரித்தான் மின்னும்.
கிழமைக்கணக்கா இப்பிடி பேய் விளையாட்டுக் காட்டுற லைற்றுகளைத் திருத்த வேணும் எண்ட எண்ணம் ஒருத்தருக்கும் இல்லை. அந்த றோட்டில இருக்கிற சனங்களும் இதைப்பற்றி ஒரு இடமும் முறைப்பாடும் குடுக்கேலையாம். ஆனால் இதெல்லாம் முறைப்பாடு கிடைச்சோ திருத்தோணும். ஒரு லைற் ரண்டு லைற் இப்பிடி மின்னி எரிஞ்சால் பரவாயில்லை. எல்லா லைற்றும் எல்லோ மின்னிக் கொண்டிருக்குது. உந்த றோட்டில தனியப்போய் வாறவையை, மின்னி எரியிற லைற்றை வைச்சுப் பயப்பிருத்தி ஆரும் களவில இறங்கமுதல், உரியவை திருத்திற காரியத்தில இறங்குவினமோ?
(05.02.2024 உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.