புதியவன்
வட்ஸ்அப் செய்திகள் மூலம் கடவுளை அவமதித்த குற்றச்சாட்டில் 22 வயது இளைஞருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் சாவுத் தண்டனை விதித்துள்ளது.
இது தொடர்பான தீர்ப்பை வழங்கிய பஞ்சாப் மாகாண நீதிமன்றம், முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் அவமதிக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் பகிர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதே வழக்கில் மற்றொரு 17 வயது இளைஞருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் தமக்கு எதிரான குற்றச்சாட்டை இருவரும் மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை தண்டனைக்குரிய குற்றமாகும். குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் அவர்களுக்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு வருவதற்கு முன்பே கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சம்பந்தப்பட்ட இளைஞருக்கு எதிரான முறைப்பாடு 2022 இல் பஞ்சாபின் தலைநகரான லாஹூரில் உள்ள பாகிஸ்தான் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சியின் சைபர் கிரைம் பிரிவால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த வார தீர்ப்பில், முகமது நபி மற்றும் அவரது மனைவிகளைப் பற்றி அவதூறான வார்த்தைகள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தயாரித்ததற்காக 22 வயது இளைஞருக்கு சாவுத் தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அவற்றை பரிமாறியதற்காக மற்றைய பிரதிவாதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.